ஒற்றை யானை தாக்கி விவசாயி படுகாயம்
தளி: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனக்கோட்டம், ஜவளகிரி வனத்திலிருந்து வெளியேறிய, 10க்கும் மேற்பட்ட யானைகள், கீஜனகுப்பம் கிராமத்தில் நேற்று காலை முகாமிட்டன. அவற்றை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். யானைகளை வேடிக்கை பார்க்க அப்பகுதியில் மக்கள் திரண்ட போது, விவசாயி நரசிம்மரெட்டி, 55, என்பவரும், தன் நிலத்தில் நின்றிருந்தார். குட்டிகளுடன் வனப்பகுதி நோக்கி யானைகள் சென்றபோது, அதிலிருந்து பிரிந்து வந்த ஒற்றை பெண் யானை, விவசாயி நரசிம்மரெட்டியை தாக்கியது. இதை பார்த்து, பொதுமக்கள் சத்தம் எழுப்பியதால், மேற்கொண்டு அவரை தாக்காமல், வனப்பகுதிக்குள் சென்றது. படுகாயமடைந்த நரசிம்மரெட்டி, ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஜவளகிரி வனத்துறை மற்றும் தளி போலீசார் விசாரிக்கின்றனர்.