துாய்மை பணியாளர்களுக்கு நலவாரிய அட்டை வழங்கல்
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரியில் நடந்த, 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமில், 40 துாய்மை பணியாளர்களுக்கு நலவாரிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.கிருஷ்ணகிரி நகராட்சி, பாத்திமா சமுதாய கூடத்தில், வார்டு எண் 8,9 பகுதிகளுக்கு நடந்த, 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமில், துறை வாரியாக அரங்குகள் அமைத்து பொதுமக்களிடம் மனுக்கள் பெற்று, கணினியில் பதிவேற்றம் செய்யும் பணிகள் நடந்தது. இதை மாவட்ட கலெக்டர் தினேஷ் குமார், துாய்மை பணியாளர்கள் நலவாரிய தலைவர் திப்பம்பட்டி ஆறுச்சாமி, நகராட்சி தலைவர் பரிதா நவாப் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் துாய்மை பணியாளர் குறைதீர் நாள் கூட்டம் நடந்தது. அப்போது, 5 துாய்மை பணியாளர்களுக்கு நலவாரிய அட்டைகள் மற்றும், 3 துாய்மை பணியாளர்களின் மகள்களுக்கு கல்வி உதவித்தொகை, 5,000 ரூபாய்க்கான காசோலைகளை வழங்கி, கலெக்டர் தினேஷ்குமார் பேசுகையில், ''உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில், 40 துாய்மை பணியாளர்களுக்கு நலவாரிய அட்டைகளும், 3 பயனாளிகளுக்கு சொத்துவரி பெயர் மாற்றம், 2 பேருக்கு ரேஷன் அட்டை, மின் இணைப்பு உள்பட, 56 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது,” என்றார்.ஓசூர் மாநகராட்சி கமிஷனர் முகம்மது ஷபீர் ஆலம், நகராட்சி கமிஷனர் ஸ்டான்லி பாபு, துாய்மை பணியாளர்கள் நலவாரிய உறுப்பினர் ரமேஷ்குமார், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சிவகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.