கிராமசபையில் அதிகாரிகளை முற்றுகையிட்ட மக்கள் அடிப்படை வசதி கேட்டு வாக்குவாதம்
தர்மபுரி, தர்மபுரி மற்றும் நல்லம்பள்ளியில் ஒன்றியத்தில் நடந்த கிராம சபை கூட்டங்களில், அடிப்படை வசதி கேட்டு, அதிகாரிகளை முற்றுகையிட்டு, பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம் நார்த்தம்பட்டி பஞ்.,ல் 'உள்ளாட்சி தின சிறப்பு கிராம சபை கூட்டம்', பஞ்., செயலர் (பொ) அருள்மணி தலைமையில் நேற்று நடந்தது. இதில், காலை, 11:00 மணிக்கு துவங்க வேண்டிய கிராம சபை கூட்டம், மதியம், 12:30 மணி வரை கிராாம மக்கள் பங்கேற்க்காமல் புறக்கணிப்பு செய்தனர். தகவலறிந்து வந்த நல்லம்பள்ளி ஏ.பி.டி.ஓ., தர்மராஜன், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, நார்த்தம்பட்டி பஞ்., மக்கள் சார்பில், கடந்த அக்., 2 காந்தி ஜெயந்தி சிறப்பு கிராம சபை கூட்டத்தில் குடிநீர் வசதி, சாக்கடை கால்வாய் வசதி, தெருவிளக்கு வசதி மற்றும் பஞ்.,ல் மாயமாகியுள்ள, 13 மின் மோட்டார்கள் திருட்டு தொடர்பாக, சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். இதுவரை சம்மந்தபட்ட அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், கிராம சபை கூட்டத்தை புறக்கணிப்பதாக மக்கள் தெரிவித்துடன், ஏ.பி.டிஓ., தர்மராஜனை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த அதியமான்கோட்டை இன்ஸ்பெக்டர் லதா, வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்களை சமாதானம் செய்தார். தொடர்ந்து, கோரிக்கைகள் குறித்து, மாவட்ட கலெக்டர் கவனத்திற்கு கொண்டு சென்று, விரைந்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.அதேபோல், பூதனஹள்ளி பஞ்., செயலர் ரூபாவதி தலைமையில், கிராம சபை கூட்டம் நடந்தது. இதில், குடிநீர் வழங்குதல், சாக்கடை கால்வாய் வசதி மற்றும் தெருவிளக்குகள் அமைத்து கொடுத்தல் மற்றும் மின் மோட்டார்கள் மூலம், குடிநீர் உறிஞ்சும் வீட்டு உரிமையாளர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வாக்குவாத்தில் ஈடுபட்டனர்.இதேபோல், நல்லம்பள்ளி ஒன்றியத்தில் பல பஞ்.,கள், தர்மபுரி ஒன்றியத்தில், இலக்கியம்பட்டி, உங்கராணஹள்ளி உட்பட பல பஞ்.,களில் பொதுமக்கள் அடிப்படை வசதி குறித்து, தொடர்ந்து பஞ்., நிர்வாகத்திடம் கேட்டும் கிடைக்காததால், கிராம சபை கூட்டத்திற்கு வந்த அதிகாரிகளிடம் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டது, பரபரப்பை ஏற்படுத்தியது.