டி.அம்மாபேட்டைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்
அரூர், தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த டி.அம்மாபேட்டையில், தென்பெண்ணை ஆற்றின் கரையோரத்தில் சென்னியம்மன் கோவில் உள்ளது. தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ஆகிய மூன்று மாவட்ட எல்லையில் அமைந்துள்ள இக்கோவிலுக்கு, ஆடி மாதம் பிறந்தவுடன் தினமும், ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக, ஆடிப்பெருக்கு விழாவில் இக்கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து, ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.ஆற்றில் புனித நீராடிவிட்டு அங்குள்ள பாறைகளுக்கு மஞ்சள், குங்குமம் இட்டு, பொரி துாவி, பூஜை செய்து வழிபாடு நடத்தி விட்டு, ஆடு, கோழிகளை பலியிட்டு பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். இந்நிலையில் ஆடிப்பெருக்கு விழாவையொட்டி, நேற்று (ஆக, 2) முதல், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அரூர் கிளை சார்பில், அரூர் பஸ் ஸ்டாண்டில் இருந்து, டி.அம்மாபேட்டைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.