உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ஏரியில் கழிவுநீர் கலப்பால் தொற்று பாதிப்பு 2ம் கட்ட திட்டத்தை நிறுத்த வலியுறுத்தல்

ஏரியில் கழிவுநீர் கலப்பால் தொற்று பாதிப்பு 2ம் கட்ட திட்டத்தை நிறுத்த வலியுறுத்தல்

தர்மபுரி, தர்மபுரி நகராட்சியின் சுத்திகரிக்கப்படாத பாதாள சாக்கடை கழிவுநீரால், கிராமத்தினர் நோய் தொற்றால் பாதிப்பதால்,- 2ம் கட்ட திட்டத்தை நிறுத்தக்கோரி, கிராம மக்கள் கலெக்டர் அலுவகத்தில் நேற்று மனு அளித்தனர்.அந்த மனுவில், அவர்கள் தெரிவித்துள்ளதாவது:தர்மபுரி மாவட்டம், செட்டிக்கரை பஞ்.,க்கு உட்பட்ட காந்திபாளையம் கிராமத்தை சுற்றியுள்ள பகுதியில், 1,247 குடும்பத்தினர் வசிக்கிறோம். தர்மபுரி நகராட்சி யில், 2008ல் தொடங்கப்பட்ட பாதாள சாக்கடை திட்டத்தின் சுத்திகரிப்பு நிலையம், காந்திபாளையம் கிராம பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இதில், பாதாள சாக்கடை குழாய்கள் அடிக்கடி உடைந்து, கிராம பகுதியில் உள்ள ஏரி மற்றும் மதிகோன்பாளையம் வழியாக செல்லும் சனத்குமார் ஆற்றில் கலப்பதால், பல்வேறு வகை நோய் தொற்று ஏற்பட்டு, அவ்வப்போது சிகிச்சை பெற்று வருகிறோம். இது குறித்து, நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், 2ம் கட்ட பாதாள சாக்கடை சுத்திகரிப்பு மையம் அமைக்க, சட்ட மன்ற பேரவை மதிப்பீட்டு குழுவினரால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. புதிய சுத்திகரிப்பு மையம் அமைத்தால், சுத்திகரிக்கப்படாத கழிவுநீர், கிராம சுற்றுப்பகுதியில் உள்ள ஏரிகளில் கலந்து பாதிப்பு ஏற்படுத்தும். கழிவுநீர் தேங்குவதால், காற்று மாசு, இயற்கை வளம், மண் வளம், சுற்றுச்சுழல் பாதிக்கப்படுவதுடன் தொற்று பரவுவதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்படும் நிலை ஏற்படும். கால்நடைகளும் பாதிக்கும். எனவே, காந்திபாளையம் கிராமத்தை, மீண்டும் ஆய்வு செய்து, 2ம்கட்ட பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்தகரிப்பு மையம் அமைக்கும் திட்டத்தை, எங்கள் கிராமத்தில் செயல்படுத்தாமல், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வேறு இடத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள்.இவ்வாறு, அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !