கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு கடந்த, 12ல், 81 கன அடி நீர்வரத்து இருந்தது. பின்னர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ததால் கடந்த, 13 முதல், 3 நாட்களாக தலா, 171 கன அடியாக நீர்வரத்து இருந்தது. இந்நிலையில், தென்பெண்ணையாற்றின் நீர்ப்பிடிப்பு பகுதி மற்றும் மாவட்டம் முழுவதும் கடந்த, 4 நாட்களாக மிதமானது முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், நேற்று கே.ஆர்.பி., அணைக்கு, 281 கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையிலிருந்து இடது மற்றும் வலது புற கால்வாய் மூலம் பாசனத்திற்காக, 171 கன அடிநீர் திறக்கப்பட்டுள்ளது. அணை மொத்த உயரமான, 52 அடியில் நேற்று, 47.90 அடியாக நீர்மட்டம் இருந்தது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, மாவட்டத்தில் அதிகபட்சமாக, போச்சம்பள்ளியில், 46 மி.மீ., மழை பதிவாகி இருந்தது. அதே போல், பெனுகொண்டாபுரம், 33.40, பாரூர், 17, கே.ஆர்.பி., அணை, 14, ஊத்தங்கரை, 12, கிருஷ்ணகிரி, நெடுங்கல் தலா, 2 என மொத்தம், 126.40 மி.மீ., மழை பதிவாகி இருந்தது. மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து, குளிர்ந்து காற்று வீசுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.