சித்தியை கொன்ற வாலிபர் சொத்து தகராறில் கொடூரம்
பாலக்கோடு,: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த எண்டப்பட்டியைச் சேர்ந்தவர் ரங்கசாமி, 65; பாலக்கோடு சர்க்கரை ஆலையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது முதல் மனைவி மாரியம்மாளுக்கு ஜெயராஜ், 38, என்ற மகன் உள்ளார்.பல ஆண்டுகளுக்கு முன் முதல் மனைவி கணவரை பிரிந்தார். இதனால் ஜோதி, 45, என்பவரை ரங்கசாமி இரண்டாவது திருமணம் செய்தார். இவர்களுக்கு இரு மகன்கள். ரங்கசாமி தன் சொத்தில் ஒரு பகுதியை முதல் மனைவிக்கு கொடுத்துள்ளார். இதை ஏற்காமல் அவரிடம் தகராறு செய்து வந்துள்ளார்.மகன் ஜெயராஜ், அவரது கூட்டாளி சந்தோஷ், 36, ஆகியோருடன் ரங்கசாமி வீட்டுக்கு முதல் மனைவி மாரியம்மாள் நேற்று காலை சென்றார். அவர் வசித்து வரும் வீட்டை எழுதி தரச்சொல்லி கேட்டுள்ளார். அவர் மறுக்கவே, ஆத்திரமடைந்த ஜெயராஜ் மற்றும் சந்தோஷ் இரும்பு ராடால் அவரை தாக்கியுள்ளனர். தடுக்க வந்த ஜோதியையும் தாக்கியதில், சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். பின், மூன்று பேரும் தப்பினர். பாலக்கோடு போலீசார் மூவரையும் தேடி வருகின்றனர்.