| ADDED : மே 01, 2024 07:31 AM
கொடைக்கானல்: கொடைக்கானலில் முதல்வர் ஸ்டாலின் 'கோல்ப்' விளையாடிய நிலையில் அவரது மனைவி துர்கா பூம்பாறையில் உள்ள குழந்தை வேலப்பர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.குடும்பத்துடன் ஓய்வெடுப்பதற்காக கொடைக்கானல் வந்துள்ள முதல்வர் ஸ்டாலின், பாம்பார் புரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தங்கி உள்ளார். நேற்று மாலை 5 : 45 மணிக்கு மைதானத்திற்கு வந்த முதல்வர் அங்கு பேட்டரி காரில் சென்று இறங்கி 'கோல்ப்' விளையாடினார். மாலை 6: 45 மணிக்கு விடுதிக்கு திரும்பினார்.முன்னதாக முதல்வர் அங்கு கூடியிருந்த சுற்றுலா பயணிகளிடம் நலம் விசாரித்தார். சிறுமியுடன் செல்பி எடுத்துக் கொண்டார். காலையிலே 'கோல்ப்' மைதானம் வர உள்ளதாக போலீசார் குவிக்கப்பட்ட நிலையில் வருகை ரத்து செய்யப்பட்டது. மாலையில் பேரிஜம் செல்ல இருப்பதாக கூறிய நிலையில் வனத்துறை சுற்றுலா தலங்களான மேயர் சதுக்கம், குணா குகை, பைன் மரக்காடு,துாண்பாறையில் உள்ள கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. காலை முதலே துாண்பாறையில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இங்கு செல்வதாக இருந்த நிகழ்ச்சியும் மாலையில் ரத்து செய்யப்பட்டது.கோயிலில் தரிசனம்
இதனிடையே முதல்வரின் மனைவி துர்கா , பூம்பாறையில் உள்ள குழந்தை வேலப்பர் கோயிலுக்கு மாலை 6:10 மணிக்கு வந்தார். அங்கு சுவாமி தரிசனம் செய்த அவர் பிரகாரத்தை சுற்றி வந்து சிறப்பு அபிஷேகம் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். குடும்பத்தினரின் பெயர்களை கூறி அர்ச்சனை செய்தார். இரவு 7 :15 மணிக்கு விடுதிக்கு திரும்பினார். 2021 சட்டசபை தேர்தல் முடிந்தவுடன் கொடைக்கானல் வந்த , துர்கா இக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.