உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மக்களுக்கு இலவசமாக 640 மெட்ரிக் டன் உரம் வழங்கல்

மக்களுக்கு இலவசமாக 640 மெட்ரிக் டன் உரம் வழங்கல்

திண்டுக்கல் : ''நுண் உர செயலாக்க மையங்களில் 640 மெட்ரிக் டன் உரம் இலவசமாக பொது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது''என,திண்டுக்கல் மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

பாதாள சாக்கடை திட்டம் பல இடங்களில் இல்லையே...

திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் 26 வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டம் செயல்பாட்டில் உள்ளது. மீதமுள்ள 22 வார்டுகளிலும் ரூ.130 கோடியில் பாதாள சாக்கடை திட்டம் அமைப்பதற்கான பணியில் ஈடுபட்டுள்ளோம். அதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. இம்மாத இறுதிக்குள் அதற்கான பணிகள் தொடங்கப்பட்டு எல்லா வார்டுகளிலும் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும். இதுதவிர ரூ.36 கோடியில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையமும் அமைக்கப்பட உள்ளது.நகரில் ரோடுகள் குண்டும் குழியுமாக உள்ளதே...ரூ.12.50 கோடியில் 24 கிலோ மீட்டருக்கு பழைய ரோடுகளை அகற்றிவிட்டு புதிய ரோடுகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. எங்கெல்லாம் சேதமான ரோடுகள் உள்ளதோ அனைத்தையும் ஆய்வு செய்து புதிய ரோடுகள் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

தெரு விளக்குள் முறையாக பராமரிக்கப்படுகிறதா...

திண்டுக்கல் நகரில் முன்பு 6577 தெரு விளக்குகள் இருந்தது. அவைகளில் பவர் குறைவாக இருப்பதாக மக்கள் புகாரளித்ததை தொடர்ந்து ரூ.5.77 கோடி செலவில் 6450 தெரு விளக்குகள் எல்.இ.டி.,விளக்குகளாக மாற்றப்பட்டுள்ளது. இதுதவிர ரூ.77 லட்சம் மதிப்பில் புதிதாக 869 இடங்களில் தெருவிளக்குகள் அமைக்க திட்டம் கொண்டு வரப்பட்டு அதில் 405 மின்விளக்குகள் அமைத்துள்ளோம். பொது மக்கள் தங்கள் பகுதிக்கு தேவை என்றால் அதையும் பூர்த்தி செய்வோம்.

காலை உணவு திட்டம் செயல்பாடு...

16 பள்ளிகளில் காலை உணவு திட்டம் பயன்பாட்டில் உள்ளது. இதில் 1133 மாணவர்கள் காலை உணவு சாப்பிடுகின்றனர். ஒரு மாதம் ரூ.2.50 லட்சம் செலவு செய்யப்படுகிறது. சுகாதாரமாகவும்,ஆரோக்கியமாகவும் மாணவர்களுக்கு உணவுகள் வழங்கப்படுகிறது. அதிகாரிகள் ஆய்வு செய்தபின்னரே மாணவர்களுக்கு எடுத்து செல்லப்படும்.பஸ் ஸ்டாண்ட்டின் நிலை என்ன...பஸ் ஸ்டாண்டில் தற்போது பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. பயணிகளுக்காக நீர்,மோர் பந்தல் அமைக்கப்பட்டது. புதிய பஸ் ஸ்டாண்ட் அமைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். அதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்.

தெரு நாய்கள் தொல்லை தாங்க முடியவில்லையே...

நகரில் 7000 தெருநாய்கள் உள்ளன. அவைகளை கொஞ்சம் கொஞ்சமாக பிடித்து முதலில் ரேபிஸ் தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டுள்ளோம். தொடர்ந்து ஏஜென்சிகள் மூலம் கருத்தடை செய்வதற்கான முயற்சியில் ஈடுபட உள்ளோம். நாய்களை பராமரிப்பதற்கான கருத்தடை மையமும் தயார் நிலையில் உள்ளது. அதையும் கால்நடைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து ஒப்புதல் வழங்கி உள்ளனர். விரைவில் நாய்களுக்கு கருத்தடை செய்வதற்கான பணிகள் தொடங்கும்.

நுண் உர செயலாக்க மையங்கள் செயல்பாடு ...

நகரில் 10 நுண் உர செயலாக்க மையங்கள் பயன்பாட்டில் உள்ளது. இதில் 2 இடங்களில் விரைவில் குப்பையை உரமாக்கும் இயந்திரம் உள்ளது. மக்களும் குப்பையை தரம்பிரித்து வழங்குகின்றனர். இதனால் துாய்மை பணியாளர்கள் விரைந்து நுண் உர செயலாக்க மையத்தில் குப்பையை ஒப்படைக்கின்றனர். 2023-2024ல் இங்கு உற்பத்தி செய்யப்பட்ட 630 மெட்ரிக் டன் உரம் இலவசமாக பொது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

டெங்கு கொசுக்கள் உற்பத்தி அதிகளவில் உள்ளதே...

டெங்கு ஒழிப்பு பணிக்காக 100 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் 48 வார்டுகளிலும் உள்ள குடியிருப்புகளுக்குள் சென்று தண்ணீர் தேங்கியிருப்பது,கொசு உற்பத்திக்கு துணைபோகும் நிலையில் உள்ள எல்லாவற்றையும் அப்புறப்படுத்துவார்கள். இதுமட்டுமில்லாமல் நீண்ட நாட்களாக தேங்கியிருக்கும் தண்ணீரில் கொசு உற்பத்தியை தடுக்க மருந்தும் தெளிக்கின்றனர். திண்டுக்கல் நகரில் டெங்கு பாதிப்புகள் எதுவும் இல்லை என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை