| ADDED : ஜூலை 11, 2024 09:33 PM
வடமதுரை:திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அகத்தியர் நகரை சேர்ந்தவர் வீரப்பன், 42. டிப்ளமோ படித்த இவரது மகனுக்கு தமிழக அரசின் பொதுப்பணித்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி, வடமதுரையச் சேர்ந்த சரவணன் என்பவர் 16 லட்சம் ரூபாய் பெற்றார். இவர் வாயிலாக அறிமுகமாகி இதே வேலைக்காக கடந்த சில மாதமாக காஞ்சிபுரம் மாவட்டம், பெரிய கோட்டம் கவுரிசங்கருக்கு 3 லட்சம் ரூபாய், மணப்பாறை பரத் என்பவருக்கு ஒரு லட்சம் ரூபாய், கோவை லட்சுமிநகர் உஷாவிற்கு 3 லட்சம் ரூபாய், மதுரை பாஸ்கருக்கு 1.30 லட்சம் ரூபாய் என மொத்தம் 24.30 லட்சம் ரூபாயை வீரப்பன் வழங்கி உள்ளார். இதைத்தொடர்ந்து சரவணன் அரசு பணி உத்தரவை வழங்கி உள்ளார். ஆனால் அது போலியானது என தெரிந்த வீரப்பன், பணத்தை திரும்பக்கேட்டுள்ளார். இதற்காக வழங்கிய காசோலை வங்கியில் பணமின்றி திரும்பியது. பணத்தைதொடர்ந்து கேட்ட வீரப்பனுக்கு ஐந்து பேரும் கொலைமிரட்டல் விடுத்தனர். அவர்களை வடமதுரை போலீசார் தேடுகின்றனர்.