| ADDED : ஜூன் 02, 2024 04:28 AM
சித்தையன்கோட்டை: ஆத்துார், சித்தையன்கோட்டை பகுதியில் நேற்று 10க்கு மேற்பட்டோர் நாய்க்கடியால் பாதிப்பிற்கு உள்ளாகினர்.ஆத்துார் ஒன்றியத்திற்குட்பட்ட 22 ஊராட்சிகள், சின்னாளபட்டி, சித்தையன்கோட்டை பேரூராட்சிகளில் பராமரிப்பற்ற தெரு நாய்களால் பிரச்னைகள் அதிகரித்து வருகிறது.உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் அலட்சியம் நீடிக்கிறது. இறைச்சி கழிவுகள் கண்ட இடங்களில் குவிப்பதால் சுகாதாரக்கேடு மட்டுமின்றி ஆதரவற்ற தெரு நாய்கள் தொற்று பாதிப்பிற்குள்ளாகும் அவலநிலை உள்ளது. இவைகள் ரோட்டில் செல்வோரை கடித்து குதறுவது வழக்கமாக உள்ளது. பாதிக்கப்பட்ட பலர் பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக அரசு, தனியார் மருத்துவமனைகளுக்கு செல்கின்றனர்.நேற்று ஆத்துார் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த நாகலட்சுமி 60, நந்தனார் தெரு காளிமுத்து 55, வேலக்கவுண்டன்பட்டி ராமசாமி 64, உட்பட 6 பேர் வெறிநாய்களின் தாக்குதலுக்கு உள்ளாகினர். ஆத்துார் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில் நாகலட்சுமி மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது போல் நேற்று முன்தினம் சித்தையன்கோட்டை, ஆத்துாரைச் சேர்ந்த 9 பேர் நாய்க்கடி பாதிப்பிற்கு உள்ளாகினர். நாய் தாக்குதலால் ஆடு, கோழிகளும் பலியாவது தொடர்கிறது.சின்னாளபட்டி ஆரம்ப சுகாதார நிலையம், தனியார் மருத்துவமனையில் பலரும் நாய்க்கடி பாதிப்பிற்கு சிகிச்சை பெற்றுள்ளனர். சித்தையன்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்திலும் இதே நிலை தொடர்கிறது.சுகாதாரத்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், கழிவு மேலாண்மை, தெருநாய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் உள்ளாட்சி அமைப்புகள் மெத்தனமாக உள்ளன. தெருநாய்களுக்கு தடுப்பூசி, ரேபிஸ் பாதித்தோருக்கு 4 தவணை தடுப்பூசி அவசியம். விழிப்புணர்வு அறிவுறுத்தல்களை மாவட்ட நிர்வாகம் செயல்படுத்த வேண்டும் '' என்றார்.