உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பாலம் இல்லை; சேதமான ரோடால் அவதி பிலாத்து பகுதியினர் பரிதவிப்பு

பாலம் இல்லை; சேதமான ரோடால் அவதி பிலாத்து பகுதியினர் பரிதவிப்பு

வடமதுரை: பிலாத்து ரெட்டியபட்டி வழித்தடத்தில் இரு இடங்களில் பாலம் இல்லாததாலும், ரோடும் சேதமடைந்து உள்ளதாலும் விவசாயிகள் சிரமப்படுகின்றனர்.அய்யலுார் கோம்பை, புத்துார் முடிமலை பகுதிகளில் பெய்யும் மழைநீர் கெங்கையூரில் சங்கமிக்கின்றன. அப்பிநாயக்கன்பட்டி பகுதியில் சேகரமாகும் மழை நீர் முட்டுகொம்பு ஓடை வழியாக பயணித்து கோப்பம்பட்டி வரட்டாற்றில் சேர்கிறது. இவை ஒன்று சேர்ந்த பெரிய ஆறாக மோர்பட்டி, தென்னம்பட்டி வழியே குடகனாற்றில் சேர்கிறது. இந்த வரட்டாறு பிலாத்து ரெட்டியபட்டி ரோட்டை கடக்கும் பகுதியில் அதிக ஆழம் கொண்ட பகுதியாக மாறி உள்ளது. இவ்வற்றில் நீர் வரத்து , இல்லாத காலங்களில் கனரக வாகனங்களில் லோடு ஏற்றிசெல்வது சிரமமாக உள்ளது. இதை கருதி இங்கு பாலம் அமைத்து தர வேண்டும்.

தகுதியற்ற ரோடு

எம்.சொக்கலிங்கம், தி.மு.க., மாவட்ட நெசவாளரணி அமைப்பாளர், வாலிசெட்டிபட்டி: மெத்தபட்டி, கம்பிளியம்பட்டி, வாலிசெட்டிபட்டி, பிலாத்து பகுதியினர் அதிகளவில் வடமதுரை செல்வதற்கு ரெட்டியபட்டி வழித்தடத்தையே பயன்படுத்துகின்றனர். இது தவிர இப்பகுதியில் களத்து வீடுகளில் வசிக்கும் விவசாயிகள், விளை நிலங்கள் வைத்திருப்போர் என பலருக்கு இந்த ரோடு முக்கியமானதாக உள்ளது. வடமதுரை காலமுறையில் புதுப்பித்தல் பணி நடந்தாலும், பிலாத்து ஊராட்சி பகுதியில் ரோடு சேதமடைந்த நிலையில் போக்குவரத்திற்கு தகுதியற்றதாக உள்ளது.

கற்களாய் மாறிய ரோடு

கே.கணேசன், தொழிலாளி, ரெட்டியபட்டி: பிலாத்து ரெட்டியபட்டி வழித்தடத்தில் பெரிய வரட்டாறும், மோர்பட்டி தடுப்பணையில் இருந்து தும்மலக்குண்டு கண்மாய்க்கு நீர் கொண்டு செல்லும் வாய்க்கால் பகுதியிலும் பாலம் இல்லாமல் இருப்பது மிகுந்த சிரமத்தை தருகிறது. ஊராட்சி பகுதியில் இருக்கும் ரோடும் பல இடங்களில் தார் மாயமாகி வெறும் கற்கள் மட்டுமே பரவி கிடப்பதால் போக்குவரத்து கஷ்டம் தருகிறது.

தேவை உயர் மட்ட பாலம்

எஸ்.வெங்கிடுசாமி, விவசாயி, பிலாத்து: பிலாத்து ரெட்டியபட்டி வழித்தடத்தில் வரட்டாறு குறுக்கிடும் பகுதி வளைவாகவும், ஆழமாகவும் இருப்பதால் பல வகையிலும் போக்குவரத்திற்கு துன்பம் தரும் விஷயமாக உள்ளது. இதனால் இங்கு பாலம் அமைக்க இரு விவசாயிகள் நிலத்தை அரசிற்கு வழங்கி உள்ளோம். 3 ஆண்டுகள் கடந்தும் பாலம் கட்டும் பணி துவங்கவில்லை. கருத்தில் கொண்டு உயர்மட்ட பாலமாக அமைக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை