| ADDED : மே 31, 2024 06:05 AM
திண்டுக்கல் : திண்டுக்கல் அரசு மருத்துவமனை பிரசவ வார்டில் கர்ப்பிணிகளுக்கு சிகிச்சையளிக்க மருந்துகள் இல்லை என்றதோடு வெளியில் சென்று வாங்கி வர கூறியதால் பொது மக்கள் டாக்டர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.திண்டுக்கல் அரசு மருத்துவமனை பிரசவ வார்டில் வடமதுரை பிலாத்து பகுதியை சேர்ந்த நசீராபானு 27,அனுமதிக்கப்பட்டார். அறுவை சிகிச்சையில் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்து 8 நாட்களுக்கு பிறகு தான் தாயும்,சேயும் வீட்டிற்கு அனுப்பும் நிலையில் நசீராபானுவை 4 நாட்களில் வீட்டிற்கு அனுப்பினர். இதனிடையே நசீரா பானுவிற்கு அறுவை சிகிச்சை செய்த இடத்தில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால் மீண்டும் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு வந்தனர். ஆனால் டாக்டர்கள் கண்டுக்கொள்ளவில்லை. இதோடு சிகிச்சைக்கான மருந்துகள் இங்கு இல்லை. வெளியில் சென்று வாங்கி வாருங்கள் என டாக்டர்கள் கூறி உள்ளனர். இதை தொடர்ந்து பெண்ணின் உறவினர்கள் டாக்டர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையறிந்த துணை கண்காணிப்பாளர் சுரேஷ்பாபு உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்க அப்பெண் மருத்துவனையில் அமதிக்கப்பட்டார். விசாரணை நடத்தப்படும்
டாக்டர் சுரேஷ்பாபு,துணை கண்காணிப்பாளர்,அரசு மருத்துவமனை,திண்டுக்கல்: திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு தேவையான மருந்துகள் உள்ளது. மருந்துகள் குறைந்தால் திங்கள் கிழமைகளில் நடக்கும் கூட்டங்களில் கேட்டறிந்து பூர்த்தி செய்கிறோம். பிரசவ வார்டில் மருந்தில்லை வெளியில் போய் வாங்கி வாருங்கள் என்ற விவகாரம் குறித்து சம்பந்தபட்ட டாக்டரிடம் முறையாக விசாரணை நடத்தப்படும், என்றார்.