உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கூட்டுறவு சங்கத்தில் தேங்கும் நீரால் மக்கள் பரிதவிப்பு

கூட்டுறவு சங்கத்தில் தேங்கும் நீரால் மக்கள் பரிதவிப்பு

வடமதுரை: பாடியூர் பி.புதுப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க வளாகத்திற்குள் மழைக்காலங்களில் நீர் தேங்குவதால் மக்கள் சிரமத்திற்குள்ளாகின்றனர். இதைத்தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.பாடியூர் ஊராட்சியில் கூட்டாத்துபட்டி, மோளப்பாடியூர், இ.புதுார், எம்.புதுார், கரையாம்பட்டி, மகாலட்சுமிபுரம், வேலாம்பட்டி, பாடியூர், பா.புதுப்பட்டி, நாட்டாண்மைகாரன்பட்டி, என்.பாரைப்பட்டி, பாம்பலநாயக்கன்பட்டி, கிரியம்பட்டி என கிராமங்கள் உள்ளன. இப்பகுதி மக்களுக்காக பி.பாடியூர் புதுப்பட்டியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் இயங்குகிறது. கூட்டுறவு சங்கத்தின் 3 பக்கமும் தனியார் தொழிற்சாலையும், முகப்பில் முள்ளிப்பாடி குளத்துார் ரோடும் உள்ளது. சுற்றியிருக்கும் அனைத்து பகுதிகளும் மேடாக இருக்கும் நிலையில் கூட்டுறவு சங்க வளாகம் மட்டும் பள்ளத்தில் உள்ளது. அருகில் இருக்கும் பல ஏக்கர் பரப்பு தொழிற்சாலை வளாகத்தில் சேகரமாகும் மழை நீர் ஒரு சேர வாசல் பகுதியில் இருக்கும் வாய்க்கால் மூலம் வெளியேற்றப்படுகிறது. இந்த நீர் அனைத்தும் பள்ளமாக இருக்கும் கூட்டுறவு வளாகத்தில் புகுந்துவிடுகிறது. இதனால் மழைக்காலங்களில் கூட்டுறவு சங்க வளாகத்தில் நீர் தேங்குகிறது. இந்த நீர் பூமிக்குள் செல்லும் வரை சராசரியாக 3 நாட்கள் வரை மக்கள் கூட்டுறவு சங்கத்திற்குள் சென்று வருவதற்கு அதிக சிரமம் அடைகின்றனர். இப்பிரச்னை மீது அதிகாரிகள் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சீர்படுத்த வேண்டும்

ஆர்.பொன்னுச்சாமி, முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர், பி.புதுப்பட்டி: பாடியூர் பி.புதுப்பட்டி பகுதியில் சிறிதளவு மழை பெய்தால் கூட்டுறவு வளாகம் முழுவதும் மழைநீர் தேங்குகிறது. இதனால் அடிக்கடி திறக்கப்படாமல் மூடியே வைக்க வேண்டியுள்ளது. சுற்றியிருக்கும் பகுதிகள் அனைத்தும் மேடாக இருக்கும் நிலையில் கூட்டுறவு வளாகம் மட்டும் பள்ளமாக உள்ளது. இப்பகுதிக்குள் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் நீர் புகுவதை தடுக்க வேண்டும். கூட்டுறவு சங்க வளாகத்தினுள் மண் நிரப்பி மேடாக்க வேண்டும்.

-மக்கள் தவிக்கின்றனர்

கே.குருசாமி, வியாபாரி, பி.புதுப்பட்டி: பாடியூர் பி.புதுப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க வளாகத்திற்குள் இப்பகுதி மக்களுக்கான ரேஷன் கடையும் செயல்படுகிறது. கன மழை நேரங்களில் நீர் தேங்கும் பிரச்னை ஏற்படும்போது ரேஷன் பொருட்கள் வாங்க செல்வோர், இதர கூட்டுறவு சங்க சேவைகளை பெற செல்லும் மக்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர். ரேஷன் கடைக்கு பொருட்கள் கொண்டு வரும் லாரிகளும் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. பல வகைகளிலும் பாதிப்பு ஏற்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி