| ADDED : மே 06, 2024 11:29 PM
திண்டுக்கல் : ''புண்ணிய தீர்த்த யாத்திரை ரயில் ஜூன் 6ல் பயணிகளுடன் திருநெல்வேலியிலிருந்து புறப்படுகிறது''என ஐ.ஆர்.சி.டி.சி.,தென் மண்டல குழு பொதுமேலாளர் ராஜலிங்கம் பாசு கூறினார்.திண்டுக்கல்லில் அவர் கூறியதாவது: ஐ.ஆர்.சி.டி.சி., சார்பில் பாரத் கவுரவ் சுற்றுலா ரயில் அறிமுகம் செய்யப்பட்டது. அது தற்போது ஜூன் 6ல் திருநெல்வேலியிலிருந்து 'புண்ணிய தீரத்த யாத்திரை' பெயரில் 500க்கு மேலான பயணிகளுடன் புறப்பட உள்ளது. திருநெல்வேலியில் துவங்கி விருதுநகர், மதுரை, சென்னை வழித்தடத்தில் 16 இடங்களில் நின்று பயணிகளை ஏற்றி கொண்டு புண்ணிய தலங்களான காசி, அயோத்தி, திருவேணி சங்கமம், கயா போன்ற இடங்களுக்கு செல்கிறது. 16 பெட்டிகளை கொண்ட இந்த ரயிலில் 3 நேரமும் சைவ உணவுகளுடன் பயணத்தின் போது போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தி தரப்படும். 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாவலர்கள் பணியில் இருப்பார்கள். பயணிகளுக்கு தென் தமிழக உணவுகள் தயாரித்து வழங்கப்பட உள்ளது. இதில் பயணிக்க பெரியவர்களுக்கு ரூ.18,850, குழந்தைகளுக்கு ரூ.17,560 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. முன்பதிவு தற்போதே தொடங்கிவிட்டது. www.irctctourism.com ல் முன்பதிவு செய்யலாம். சந்தேகங்களுக்கு 82879 32122, 82879 32070 ல் தொடர்பு கொள்ளலாம் என்றார்.