| ADDED : ஜூலை 25, 2024 07:00 AM
திண்டுக்கல்: கட்டி 4 ஆண்டுகளாகியும் உபயோகமற்ற குடிநீர் மேல்நிலை தொட்டி, போடப்படாத ரோடுகள், அள்ளப்படாத குப்பை , அடிப்படை வசதிகள் செய்து தருவதில் பாகுபாடு என பல்வேறு பிரச்னைகளுடன் திண்டுக்கல் மூவேந்தர் நகர் குடியிருப்போர் பரிதவிக்கின்றனர்.திண்டுக்கல் - திருச்சி ரோட்டில் உள்ள மூவேந்தர் நகர் குடியிருப்போர் நல சங்க தலைவர் ஜோதிலிங்கம், செயலாளர் வெங்கடசுப்ரமணி, பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, கவுரவ தலைவர் அன்பு கிறிஸ்டியன் கூறியதாவது:எங்கள் பகுதி பெரிய பரப்பளவைக் கொண்டது. சீலப்பாடி செல்லும் வழியில் உள்ள தெருக்களில் உள்ள வசதிகளில் பாதி கூட எங்களுக்கு கிடைப்பதில்லை. சீலப்பாடி பகுதியின் கிழக்கு பகுதிகள் முழுமையாக புறக்கணிக்கப்படுகிறது. பக்கத்து தெருவில் ஆளும் கட்சியின் முக்கிய அரசியல் பிரமுகர்கள் வசிப்பதால் அந்த தெருக்களின் வளர்ச்சி பணிகளுக்கு மட்டும் ஊராட்சி நிர்வாகம் முக்கியத்துவம் தருகிறது. ஆனால் அதற்கு அடுத்து சில அடி துாரமே உள்ள எங்கள் தெருவில் வசிப்போர்கள் குறைகளை கேட்பதில்லை. ரோடு முதல் குப்பை வரையிலான அனைத்து வரிகளையும் நாங்களும் முறையாக செலுத்திதான் வருகிறோம். இருந்தும் அதற்கான வசதிகள் செய்து கொடுப்பதில் பாகுபாடு பார்க்கப்படுகிறது. ஒருநாள் கூட சப்ளை இல்லை
வெங்கடேஸ்வரா நகர் - மூவேந்தர் நகர் இரண்டிற்கும் இடைப்பட்ட இடத்தில் குடிநீர் மேல்நிலைத்தொட்டி கட்டப்பட்டுள்ளது. ஆனால் 4 ஆண்டுகள் ஆகியும் பயன்பாட்டிற்கு வரவில்லை. புதிதாக கட்டியது அப்படியே இருக்கிறது. ஒருநாள் கூட அதில் சப்ளை வரவில்லை. இதற்காக போடப்பட்ட அருகில் உள்ள போர்வெல் இயந்திரம் தனியாரின் ஆக்கிரமிப்பின் பிடியில் இருந்து வருகிறது. அதற்கான வரியையும் ஊராட்சிதான் கட்டுகிறது. ஆனால் 150 க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் எங்கள் பகுதியில் தண்ணீர் வசதிகள் இல்லை. பொதுக்குழாய், டேங்குகள் என எதுவுமே இல்லை, தனி தீவு போல் உணர்வு
குப்பை சேகரிக்கும் பணி தொய்வாக உள்ளது. குப்பை எங்கே கொட்டுவதென்றே தெரிவதில்லை. எவரும் அள்ளுவதில்லை. இதனால் நோய் ஏற்படும் சூழல்தான் உள்ளது. எந்த பகுதிகளிலும் சாக்கடைகளே இல்லை. இதனால் மழைபெய்தால் சாக்கடை ரோட்டில் ஓடுகின்றன. ஒரு கால்வாய் கூட கட்டப்படவில்லை. ரோடு வசதிகள் என்பதே இல்லை. பல இடங்களிலும் மண் ரோடுகள்தான் உள்ளது. , தெரு விளக்குகளும் முறையாக இல்லை. அடிப்படை வசதிகளும் இன்றி தனித்தீவில் இருப்பது போல் இருக்கிறோம். எத்தனை மனுக்கள் கொடுத்தாலும் பயனில்லை என்றனர்.