| ADDED : ஜூலை 09, 2024 10:02 PM
பட்டிவீரன்பட்டி:கே.சிங்காரக்கோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலராக இருந்த சதாசிவம் ஒராண்டிற்கு முன்பு ஓய்வு பெற்றார். கே.சி.பட்டியில் பணியாற்றிய பால்பாண்டி செயலராக நியமிக்கப்பட்டார்.அவர் மீது புகார்கள் எழுந்ததால், இதே வங்கி பணியாளர் பிரபாகரன் செயலராக நியமிக்கப்பட்டார். தற்போது, செயலராக தும்மலப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலராக பணியாற்றி வரும் சுப்புலட்சுமி நியமிக்கப்பட்டு உள்ளார். இரு ஆண்டுகளாக இந்த சங்கத்தில், 1,100 விவசாயிகள், பொதுமக்கள், 6 கோடி ரூபாய் நகை கடன் பெற்றுள்ளனர். கே.சிங்காரகோட்டையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஜெயலட்சுமி, 30,000 ரூபாய் நகை கடன் பெற்றிருந்தார். அதை மீட்க பணம் செலுத்தி நகையை கேட்டுள்ளார். நகையை கொடுக்க தாமதம் ஏற்பட்டதால் கலெக்டரிடம் புகார் செய்தார். இதையடுத்து ரெட்டியார்சத்திரம் வட்டார தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கள அலுவலர் பொன்னுச்சாமி விசாரித்தார். 50,000, ஒரு லட்சம் பணம் பெற்றவர்கள் பெயர்களில், 2 முதல் 3 லட்சம் ரூபாய் வரை கடன் பெற்றதாக எழுதி, தொகையை முறைகேடு செய்தது தெரியவந்தது. அடகு நகைகளுக்கு ரசீதும் வழங்குவதில்லை. இதன்படி, இரு ஆண்டுகளில், 1 கோடி ரூபாய் வரை முறைகேடு நடைபெற்றிருக்கலாம் என தெரிய வந்துள்ளது. அரசு நகை கடன் தள்ளுபடியின் போது, பெரும்பாலான பயனாளிகளிடம் செலவு தொகை என்ற பெயரில் குறிப்பிட்ட ஒரு தொகையைப் பெற்றதாகவும் புகார் எழுந்துள்ளது. இது குறித்தும் விசாரணை நடக்கிறது. பொன்னுச்சாமி கூறியதாவது:முறைகேடில் ஈடுபட்டதாக கூறப்பட்ட செயலர் சதாசிவம் ஓய்வு பெற்று விட்டார். அடுத்தடுத்து செயலராக பணியாற்றிய பால்பாண்டி, பிரபாகரன் இருவரும் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர்.இவர்கள் இருவரிடம் இருந்து, 10 லட்சம் ரூபாய் வரை மீட்டுள்ளோம். மீதி தொகை குறித்து விசாரிக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.