வடமதுரை: சித்துவார்பட்டி ஊராட்சியில் பாலக்குறிச்சி வடுகப்பட்டி, பாண்டியனுார் கிராமங்களில் ரோடுகள் சேதமாகி குண்டும் குழியுமாக இருப்பதால் மக்கள் மக்கள் அவதிப்படுகின்றனர்.சித்துவார்பட்டி ஊராட்சியில் வடகோடி பகுதியில் சீரங்ககவுண்டனுார், வடுகப்பட்டி, பாண்டியனுார், தோப்புபட்டி, பாலக்குறிச்சி கிராமங்கள் உள்ளன. இங்கு வடுகப்பட்டி முதல் பாண்டியனுார், எரியோடு ரோடு முதல் புதுகொம்பேறிபட்டி ரோடு, 3 ரோட்டிலிருந்து பாலக்குறிச்சி வழியே செம்மடை, சீரங்ககவுண்டனுார் முதல் பாண்டியனுார் ரோடுகளில் பெரும்பகுதி பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளதால் மக்கள் கடும் அவதியில் உள்ளனர். வாகனங்களில் செல்வோர் தடுமாறி கீழே விழும் நிலையும் அடிக்கடி நடக்கிறது. வடுகப்பட்டி பாண்டியனுார் ரோட்டில் குறுக்கிடும் ஓடையில் உயர் மட்ட பாலம் கட்ட வேண்டும். மாவட்ட நிர்வாகம் இதன்மீது கவனம் செலுத்த வேண்டும். பாலம் வேண்டும்
எம்.கருப்பத்தேவர், காங்., வட்டார செயற்குழு உறுப்பினர், வடுகப்பட்டி: அய்யலுார், சித்துவார்பட்டி செல்லும் இரு திசை ரோடுகளும் சேதமுற்று கிடப்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர். சீரங்ககவுண்டனுார் ரோட்டில் இருபக்கமும் வளர்ந்திருக்கும் முட்புதர்களை அகற்ற வேண்டும். இப்பகுதியில் சேதமுற்று விபத்து ஆபத்தாக இருக்கும் மின் கம்பங்களை மாற்றி அமைக்க வேண்டும். புதுசித்துவார்பட்டி, பழைய சித்துவார்பட்டி இடையே வரட்டாற்றில் பாலம் தடுப்பு துான்கள் இல்லாமல் இருக்கும் பாலம் சேதமாக கிடக்கிறது. இங்கு உயர் மட்ட பாலம் அமைக்க வேண்டும். -ரோடை சீரமைக்க வேண்டும்
வி.பால்மூர்த்தி, பா.ஜ., அரசு சாரா பிரிவு மாவட்ட செயலாளர், அய்யலுார்: பாண்டியனுாரிலிருந்து வடுகப்பட்டி, சீரங்ககவுண்டனுாரிலிருந்து பாண்டியனுாரை இணைக்கும் ரோடுகள் சேதமாக உள்ளன. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் ரோடு புதுப்பித்தல் பணி இங்கு நடக்காததால் இந்த அவல நிலை உள்ளது. இவற்றை சீரமைக்க வேண்டும். பாண்டியனுாரில் கட்டி முடித்து 15 ஆண்டுகளாக தொட்டியில் விரிசலால் நீர்கசிவு உள்ளது. விபத்து ஏற்படும் முன் புதிய தொட்டியை தரமான முறையில் கட்ட வேண்டும். பஸ் வசதி வேண்டும்
எஸ்.மனோகரன், கல்லுாரி மாணவர், வடுகப்பட்டி: வடுகப்பட்டி பள்ளி அருகில் பயனற்று கிடக்கும் கிணறு சுகாதாரக்கேடை ஏற்படுகிறது. இதனால் அப்பகுதியில் வசிப்போர் சிரமப்படுகின்றனர். குப்பையை முறையான மறு சுழற்சிக்கு அனுப்ப துாய்மை பணியாளர்களை அதிகளிவில் வேலைக்கு அமர்த்தி, அவர்களிடம் வேலைத் திறனையும் பெற்றால் மட்டுமே திட்டம் வெற்றி பெறும். வடுகப்பட்டிக்கு காலை 7:30 மணி, 10:30 மணி அளவில் நீட்டிப்பு செய்து இயக்கப்பட்ட தனியார் பஸ் சேவை தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இதை மீண்டும் இயக்கினால் இப்பகுதியில் இருக்கும் பல கிராம மக்களுக்கும் பெரிதும் உதவியாக இருக்கும்.