அரசு வேலை தருவதாக ரூ.7 லட்சம் மோசடி: கைது 1
திண்டுக்கல்: அரசு வேலை வாங்கித் தருவதாகக்கூறி வாடிப்பட்ட மக்கள் நல பணியாளரிடம் ரூ.6 லட்சத்து 85 ஆயிரம் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார். தலைமறைவான மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர். மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே ஊத்துக்குழியை சேர்ந்தவர் மக்கள் நல பணியாளர் ஆதிமுத்து 53. மகன் சிவராஜ்க்கு அரசு வேலைக்காக ஆதிமுத்து முயற்சித்தார். 2023ல் அவருடன் வேலைபார்த்த பில்லமநாயக்கன்பட்டியை சேர்ந்த கோவிந்தமாள் மூலமாக திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டியை சேர்ந்த மாமத்தி 54, புதுக்கோட்டை மாவட்டம் கதவம்பட்டியை சேர்ந்த கிருபாகரன் அறிமுகமாயினர். அவர்கள் வாடிப்பட்டி ஒன்றிய அலுவலகத்தில் உதவியாளர் பணியிடம் காலியாக உள்ளது. ரூ.7 லட்சம் செலவாகும் என கூறினர். அதை நம்பிய ஆதிமுத்து பல்வேறு தவணைகளாக ரூ.6 லட்சத்து 85 ஆயிரத்தை மாமத்தி, கிருபாகரன் வங்கிக்கணக்கிற்கு அனுப்பினார். ஆனால், அவர்கள் அரசு வேலை வாங்கி தரவில்லை. பணத்தை திரும்பக்கேட்டபோது ஆதிமுத்துவுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி., பிரதீப்பிடம் புகார் அளித்தார். அதன்படி குற்றப்பிரிவு டி.எஸ்.பி., குமரேசன், இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி ஆகியோர் மாமத்தியை கைது செய்தனர். தலைமறைவான கிருபாகரனை தேடி வருகின்றனர்.