உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / குடிநீர் குழாய் உடைப்பால் தொடரும் விபத்துக்கள்

குடிநீர் குழாய் உடைப்பால் தொடரும் விபத்துக்கள்

வடமதுரை: வடமதுரை எரியோடு இடையே ரோட்டின் கீழ் செல்லும் காவிரி குடிநீர் குழாய் பாதையில் பல இடங்களில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு ரோடு சேதமாவதால் விபத்துக்கள் தொடர மக்கள் அதிருப்தியில் உள்ளனர். வடமதுரை பகுதிக்கான காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாய்கள் கரூர் திண்டுக்கல் பாதையில் எரியோட்டில் இருந்து பிரிக்கப்படுகிறது. எரியோடு அய்யலுார் ரோட்டில் அமைக்கப்பட்டுள்ள மேல்நிலைத் தொட்டியில் இருந்து குழாய் பாதை மூலம் வடமதுரை இணைப்பு ரோடு வழியே ஒட்டன்சத்திரம் வடமதுரை ரோடு வழியே கொண்டு வரப்படுகிறது. ஒட்டன்சத்திரம் வடமதுரை மாநில நெடுஞ்சாலையாக மாற்றப்படுவதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பாக குழாய் பதிக்கும் பணி நடந்ததால் பல இடங்களில் ரோட்டின் விளிம்பில் பள்ளம் தோண்டி குழாய்கள் பதிக்கப்பட்டன. மாநில நெடுஞ்சாலையாக மாற்றும் பணி நடந்தபோது பல இடங்களில் குழாய் பாதை ,கேட் வால்வுகள் மூடப்பட்டு ரோடு அகலமாக்கப்பட்டது. இதனால் சில ஆண்டுகளாக எரியோடு- வடமதுரை இடையே ரோட்டில் ஆங்காங்கே குழாய் உடைந்து நீர் கொப்பளிக்கிறது. இவ்விடங்களில் குடிநீர் வாரிய அதிகாரிகள் பள்ளம் தோண்டி உடைப்பை சரி செய்கின்றனர். ஆனாலும் நிரந்தர தீர்வாக இல்லாமல் மீண்டும் மீண்டும் உடைப்பு ஏற்படுகிறது. தொடர் நீர் கசிவால் அடுத்த சில நாட்களில் ரோட்டில் பள்ளம் தோன்றுகிறது. இப்பகுதி குறித்து முன்னரே அறிந்திராமல் மாநில நெடுஞ்சாலை என்ற அதீத நம்பிக்கையில் வரும் வாகன ஓட்டிகள் இரவு நேரத்தில் பள்ளத்தில் வாகனங்கள் சிக்க நிலை தடுமாறி விபத்தில் சிக்குகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்னர் வடமதுரையில் துவங்கி ஒட்டன்சத்திரம் வரை மேலும் ரோடு அகலமாக்கப்பட்டது. இதனால் தற்போது உடைப்பு ஏற்படுவது ஒரு பக்க ரோட்டின் மையப்பகுதியில் நடக்கிறது. இங்கு ஏற்படும் பள்ளம், வைக்கப்படும் பேரி காடு தடுப்புகளால் அடிக்கடி விபத்துக்கள் நடப்பதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். -தேவை நிரந்தர தீர்வு ஆர்.மகேஷ்ராஜா, தி.மு.க., பிரமுகர், தென்னம்பட்டி: வடமதுரை பகுதியினர் வேடசந்துாரில் இயங்கும் தாலுகா அலுவலகம், நீதிமன்றம் உள்ளிட்ட பணிகளுக்கு பயன்படுத்தும் முக்கிய ரோடாக உள்ளதால் ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட் செல்வதற்கும் விவசாயிகள் இவ்வழியே செல்கின்றனர். தற்போது இந்த ரோடை அகலமாக்கியது வரவேற்கதக்கது. அதே நேரம் இத்தடத்தில் 6 இடங்களில் கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாக ரோட்டின் கீழ் பதிக்கப்பட்டுள்ள காவிரி குடிநீர் உடைந்து ரோடு சேதமடைவதும், பள்ளம் ஏற்பட்டு விபத்துகளை உருவாக்குவதும் பெரிய சிக்கலாக நீடிக்கிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடரும் குழாய் உடைப்பு ஆர்.பெருமாள், கார் டிரைவர், கெச்சானிப்பட்டி: திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட வட மாவட்டங்களை சேர்ந்த முருக பக்தர்களது வாகனங்கள் அதிகளவில் இந்த வழியே பழநிக்கு செல்கின்றன. இவ்வாறு பல வகையிலும் முக்கியத்துவம் பெறும் இந்த ரோட்டின் கீழே பதிக்கப்பட்டுள்ள காவிரி குழாய்களுக்குரிய காற்று போக்கி வால்வுகள் அகற்றப்பட்டதால் குழாய் உடைப்பு தொடர் கதையாக உள்ளது. ரோட்டின் கீழ் குழாய் உடைப்பு பிரச்னையை தீர்க்கும் நோக்கில் அறிவியல் தொழில்நுட்ப ரீதியாக பணிகளை செய்து தீர்வு காண வேண்டும். -மேலும் மேலும் தவறு வி.சுரேஷ், த.வே.க., பிரமுகர், தும்மலக்குண்டு: வடமதுரை எரியோடு இடையே அடிக்கடி ஏற்படும் இந்த உடைப்பு பகுதி பள்ளங்களில் ஏராளமான விபத்துக்கள் நடந்து பலர் உயிர் இழந்துள்ளனர். ஏராளமானோர் காயமடைந்து வாழ்க்கையை தொலைத்துவிட்டு பரிதவிக்கின்றனர். இந்த ரோட்டின் கீழே பதிக்கப்பட்டுள்ள காவிரி குழாய் பாதைக்கு பதிலாக ரோட்டிற்கு வெளிப்புறமாக புதிய குடிநீர் குழாய் பாதை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது வடமதுரை காணப்பாடி ரோட்டிலும் ரோடு விளம்பில் புதிய குடிநீர் குழாய் பாதை அமைக்கின்றனர். இதுவும் பாதிப்பை ஏற்படுத்தும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !