ஆலைகள் மீது நடவடிக்கை எடுங்க குறைதீர் கூட்டத்தில் முறையீடு
திண்டுக்கல்: வேடசந்துார் சுற்றுப்பகுதியில் அனுமதியின்றி செயல்படும் ஆர்.ஓ., பிளான்ட் ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பன உள்பட பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக மனுவாயிலாக 189 பேர் முறையிட்டனர்.கலெக்டர் பூங்கொடி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது. திட்ட இயக்குநர் சதீஷ்பாபு, வழங்கல் அலுவலர் ஜெயசித்ரகலா, உதவி ஆணையாளர் பால்பாண்டி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் கோட்டைக்குமார், முருகன், தனித்துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்புத் திட்டம்) கங்காதேவி கலந்துகொண்டனர்.ஹிந்து மக்கள் கட்சியின் மேற்கு மாவட்ட செயலர் ராமசந்திரன் அளித்த மனுவில், வேடசந்துார் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் பல ஆண்டுகளாக அரசின் அனுமதி பெறாமல் ஆர்.ஓ., பிளான்ட் ஆலைகளை தனி நபர்கள் நடத்தி வருகின்றனர். நாள் ஒன்றுக்கு பல ஆயிரம் லிட்டர் தண்ணீரை உறிஞ்சி எடுத்து விற்று வருகின்றனர். வியாபார நோக்கில் செயல்படும் ஆலைகளின் உரிமையாளர்கள் குடிநீர் சுத்திகரிப்பு என்ற பெயரில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனங்களை கலந்து விற்பனை செய்கின்றனர். இதனால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. உரிய ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.