சாலையோர மரங்களில் ஆணி அடித்து போர்டுகள்; அவசியமாகிறது போலீஸ் நடவடிக்கையோடு அபராதம்
வேடசந்துார் : வேடசந்துார் பகுதி ரோட்டோர மரங்களில் ஆணிகளைக் கொண்டு போர்டுகளை அடிக்கும் நடைமுறை மீண்டும் துவங்கி உள்ளதால் சம்பந்தபட்ட நிறுவனங்கள் மீது போலீஸ் நடவடிக்கையோடு அபராதம் விதிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.வேடசந்துார் - கோவிலுார் ரோடு, எரியோடு ரோடு, கூம்பூர் ரோடு, திண்டுக்கல் -கரூர் ரோடு என பல்வேறு ரோடுகளின் ஓரப்பகுதிகளில் உள்ள மரங்கள் ரோடுகள் அகலப்படுத்தும் பணியின் போது அழிக்கப்பட்ட நிலையில் ஒரு சில இடங்களில் மட்டுமே வேம்பு, புளி, பனை உள்ளிட்ட மரங்கள் உள்ளன. இந்த மரங்களில் ஆணிகளை கொண்டு விளம்பர பலகைகள் அடிக்கப்பட்ட நிலையில் நெடுஞ்சாலை துறை, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்ததின் பேரில் ஆணிகள் கொண்டு அடிப்பதை நிறுத்தினர்.தற்போது வேடசந்தூர் தாலுகா பகுதியில் 80 சதவீத மரங்களில் விளம்பரப் பலகைகளை தனியார் பள்ளி நிர்வாகம் ஒன்று ஆணிகளை கொண்டு அடித்துள்ளது. ஆங்காங்கே தனியார் பைப் கம்பெனி, கம்பி வலை கம்பெனி என்ற பெயரிலும் போர்டுகள் அடிக்கப்பட்டுள்ளன. இதை முற்றிலும் அகற்றி போர்டு மாட்டிய நிறுவனங்கள் போலீஸ் நடவடிக்கையோடு அபராதமும் விதிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.