கொடைக்கானல் : ஏரிச்சாலை மேம்பாட்டு பணியில் தாமதம், குடிநீர் ஆதாரத்தில் செப்டிக்டேங்க் கழிவு என்பன போன்ற பிரச்னைகளால் கொடைக்கானல் நகராட்சி 2 வது வார்டு மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர்.கீழ் பூமி, செம்மண் மேடு, ஏரிச்சாலை, பாம்பே சோலை, படகு குளம் உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய இந்த வார்டில் சுற்றுலா பயணிகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்களுடன் தங்களது வரவை இனிமையாக்கி கொள்ள ஒரு இயற்கை சூழ்ந்த பகுதியாக ஏரி உள்ளது. ஏரி சாலையில் நகராட்சியால் மேற்கொள்ளப்படும் மேம்பாட்டு பணிகள் ஓராண்டாக நிறைவடையாத நிலையில் வருகின்ற சுற்றுலாப் பயணிகள் அவதிப்படுகின்றனர். முக்கிய சுற்றுலா தலங்களுக்கு செல்லும் போக்குவரத்து ரோடுகளும் குண்டும் குழியுமாக உள்ளது. கூடுதல் தெருவிளக்கு வசதி இல்லாமல் ஆங்காங்கு இருள் சூழ்ந்து காணப்படுகிறது . பட்டா இல்லாத நிலையில் மக்கள் அவதிப்படுகின்றனர். காட்டுமாடு, காட்டுப்பன்றி, தெருநாய்களால் தொல்லையால் சுற்றுலா பயணிகள் மட்டுமன்றி மக்களும் பாதிப்பினை சந்திக்கின்றனர். தனியார் விடுதிகளின் செப்டிக் கழிவுநீர் ஜிம்கானா குடிநீர் ஆதாரத்தில் கலப்பதால் பெரும் சுகாதாரக்கேடுடன் நீரினை பருகும் மக்கள் நோய்பாதிப்புக்கு ஆளாகின்றனர். ஏரிச்சாலையில் சமூக விரோத செயல்களை கண்காணிக்க சிசிடிவி கேமரா உள்ளிட்டவை இல்லாமல் குற்ற நேரங்களில் போலீசார் பரிதவிக்கின்றனர் . ,பராமரிக்கப்படாத சிறுவர் பூங்காவால் சிறார்கள் தவிக்கின்றனர். பயன்பாட்டிற்கு வராத நகராட்சி படக குழாம், ஏரி சாலையில் குவிந்துள்ள கட்டுமான பொருட்களால் சுற்றுலா பயணிகள் தடுமாறும் சூழல் உள்ளது. குடியிருப்பு வாசிகள் அவதி
ராஜா, இயற்கை ஆர்வலர்: செம்மண் மேடு பகுதியில் சில தினங்களுக்கு முன் மண் சரிவு ஏற்பட்டு குடிநீர் சப்ளை பாதித்துள்ளது. மேல்மலைக்கு செல்லும் இந்த பகுதியில் நெடுஞ்சாலை துறையின் ரோடுகள் குண்டும் ,குழியுமாக பராமரிக்கப்படாததால் குடியிருப்பு வாசிகள் அவதியுறுகின்றனர் .போக்குவரத்து வாகனங்கள் பழுதாகி நிற்கும் அவலமும் உள்ளது. மருத்துவ வசதிக்கு பயன்படும் 108 வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலை உள்ளது. நகராட்சி படகு குழாமை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். பயணிகளுக்கு இடையூறு
காதர் நவாஸ், வியாபாரி : கீழ்பூமி பகுதியில் வசிப்பவர்களுக்கு பட்டா இல்லாத நிலை உள்ளது. அதற்கு மாற்றாக உள்ள வரி இனங்களை நகராட்சி அமல்படுத்த வேண்டும். ஏரிச்சாலையில் உள்ள கழிப்பறையை மாலை 5 :00மணிக்கு மூடுவதால் சுற்றுலாப் பயணிகள் அவதிப்படுகின்றனர். ஏரிச்சாலையில் கட்டுமான பொருட்கள் குவிப்பதால் பயணிகளுக்கு இடையூறாக உள்ளது. கீழ்பூமியில் தனியார் விடுதிக்கு செல்லும் பகுதியில் கூடுதல் தெருவிளக்குகள் அமைக்க வேண்டும். சிமென்ட் ரோடு சேதம்
அகஸ்டின், டிரைவர்: கீழ் பூமி பகுதி தனியார் விடுதி செப்டிக் டேங்க் கழிவுநீர் ஜிம்கானா குடிநீர் ஆதாரத்தில் கலக்கிறது. இதிலிருந்து செல்லும் நீர் ஏரியில் கலப்பதால் மாசடையும் அபாயம் உள்ளது. தெருவிளக்குகள் ஒன்றிரண்டு எரியாத நிலையில் அவற்றை சீர் செய்ய கூறினால் மாதக்கணக்கில் சரி செய்யாத நிலை உள்ளது. தற்போது அமைத்த சிமென்ட் ரோடு சேதம் அடைந்துள்ளது. இந்த ரோட்டின் வழியாக தனியார் விடுதிக்கு குடிநீர் எடுப்பதால் ரோடு சகதியாக உள்ளது. ஏரிச்சாலையில் சமூக விரோத செயல்களை கண்காணிக்க சிசிடிவி கேமரா அமைக்க வேண்டும். குடிநீர் பிரச்னைக்கு தீர்வு
ஜெயசுந்தரம், கவுன்சிலர், (அ.தி.மு.க.,): ரூ. 2 கோடிக்கு வளர்ச்சி பணிகள் செய்யப்பட்டுள்ளது. எரிச்சாலையில் ரூ. 24 கோடியில் வளர்ச்சி பணிகள் நடந்து வருகின்றன. செம்மண்மேடு பகுதியில் ஏற்பட்ட குடிநீர் பிரச்னை சில தினத்தில் சரி செய்யப்படும். மெயின் ரோடு சரி செய்ய நெடுஞ்சாலைத்துறையிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. கூடுதலாக தெரு விளக்கு அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காட்டுமாடு, காட்டுப்பன்றி உள்ளிட்டவற்றை தடுக்க வனத்துறையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. தனியார் விடுதியில் செப்டிக் டேங்க் கழிவு நீர் ஜிம்கானா மைதானத்தில் கலப்பது குறித்து நகராட்சி அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்யப்படும். நகராட்சி எரிச்சாலை பகுதியில் நடக்கும் சமூக விரோத செயல்களை கண்காணிக்க சிசிடிவி கேமரா அமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. என்றார்.