பழநி முருகன் கோயிலில் அக்.12ல் நடையடைப்பு: பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு
பழநி:திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் உப கோயிலான பெரியநாயகி அம்மன் கோயில் நவராத்திரி விழாவை முன்னிட்டு அக்.,12 மதியம் 3:15 மணி முதல் முருகன் கோயில் நடை அடைக்கப்படும். காலை 11:30 மணி முதல் அன்று முழுவதும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.பெரிய நாயகி அம்மன் கோயிலில் நவராத்திரி விழா அக்., 3 காப்பு கட்டுதலுடன் துவங்கியது. இவ்விழா அக்., 12 வரை நடக்க உள்ள நிலையில் அக்.,12ல் பழநி முருகன் கோயிலில் காலை 11:30 மணி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படாததுடன் தரிசன டிக்கெட் வழங்குவதும் நிறுத்தப்படும். இதையடுத்து மதியம் 12:00 மணிக்கு உச்சிக்கால பூஜை, 1:30 மணிக்கு சாயரட்சை பூஜை தொடர்ந்து மதியம் 3:15 மணிக்கு முருகன் கோயில் திருநடை அடைக்கப்படும். அக்., 13 முதல் வழக்கம்போல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். இது போல் அக்., 3 முதல் 12 வரை கோயிலில் தங்கரத புறப்பாடும் நடக்காது என கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து தெரிவித்துள்ளார்.