மாசடைந்துள்ள இடும்பன் குளம் பாதுகாப்பு குறைபாட்டால் பக்தர்கள் கவலை
பழநி: பழநியில் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ள நிலையில் புனித நீர்நிலைகளான இடும்பன் குளம் மாசடைந்துள்ளது. பாதுகாப்பு குறைபாடு உள்ளதால் பக்தர்கள் கவலை அடைந்துள்ளனர். பழநி முருகன் கோயிலுக்கு பாதயாத்திரையாக பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. ஆண்டுதோறும் பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் இடும்பன் குளத்தில் குளித்து நீராடிய பின் பழநி முருகன் கோயில் சென்று சுவாமி தரிசனம் செய்வர். தற்போது குளத்தில் துணிகள் அதிகம் மிதப்பதாலும், மாசடைந்து உள்ளதாலும் குளத்தில் குளிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும் ஆண் பக்தர்கள் ஆபத்தான நிலையில் இரும்பு தடுப்பு மீது ஏறி அமர்ந்து அங்கிருந்து குளத்தில் குதித்து குளிக்கின்றனர். பெண், ஆண் குளிக்கும் பகுதி என தனியே தடுப்பு அமைக்க கோரிக்கையும் எழுந்துள்ளது. பக்தர்களின் வருகை அதிகரித்துள்ள நிலையில் மீட்பு பணிக்கான தீயணைப்புத் துறையினர், பாதுகாப்புக்கு போலீசாரை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.