குடும்ப பிரச்னையில் மாமனார் கொலை; மருமகன் கைது
பழநி:திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே குடும்ப பிரச்னையில் மாமனாரை கொலை செய்த மருமகனை போலீசார் கைது செய்தனர்.பழநி அருகே கோதைமங்கலத்தை சேர்ந்தவர் கட்டட தொழிலாளி செல்வகுமார் 55. அதே பகுதியில் மகள் ஸ்ரீதேவி 30, மருமகன் அன்பரசன் 34, வசித்து வந்தனர். ஸ்ரீதேவியுடன் அன்பரசன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டார். இதனால் மாமனார் மருமகன் இடையே வாக்குவாதமும் ஏற்படுவதுண்டு. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மகளுடன் தகராறில் ஈடுபட்ட அன்பரசனிடம் செல்வகுமார் வாக்குவாதம் செய்ய கைகலப்பாக மாறியது. அப்போது அன்பரசன் தள்ளி விட்டதில் செல்வகுமார் மயக்கமடைந்தார். பழநி அரசு மருத்துவமனையில் சேர்த்தபோது இறந்துவிட்டதாக டாக்டர்கள் கூறினர். அன்பரசனை பழநி தாலுகா போலீசார் கைது செய்தனர்.