நத்தம் மாரியம்மன் கோயிலில் பூக்குழி
நத்தம்: - நத்தம் மாரியம்மன் கோயில் மாசி திருவிழாவில் -25 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பூக்குழி இறங்கி நேர்த்திகடன் செலுத்தினர்.நத்தம் மாரியம்மன் கோயில திருவிழாக்களில் மிகவும் முக்கியமானது மாசி பெருந்திருவிழா. இந்த விழா மார்ச் 3-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மறுநாள் உலுப்பகுடி அருகே கரந்தமலை கன்னிமார் தீர்த்தத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி மஞ்சள் ஆடைகள் அணிந்து கோயிலுக்கு வர காப்பு கட்டி 15நாட்கள் விரதத்தை தொடங்கினர். அன்றிரவு அம்மன் குளத்திலிருந்து கம்பம் நகர்வலமாக எடுத்துவரப்பட்டு கோயிலில் ஸ்தாபிதம் செய்யப்பட்டது. இதைதொடர்ந்து விழாவில் ஒவ்வொரு வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் மாரியம்மன் மயில், சிம்மம், அன்னம் போன்ற வாகனங்களில் எழுந்தருள நகர்வலம் நடந்தது. பக்தர்கள் பால், சந்தனம், தேன் குடங்களை எடுத்து வந்து நேர்த்திக்கடனாக அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். இதை தொடர்ந்து மாரியம்மனுக்கு மஞ்சள் திருப்பாவாடை ஊர்வலமாக எடுத்து வந்து காணிக்கையாக செலுத்தபட்டது. நேர்த்திக்கடன்நேற்று அதிகாலை முதல் வரை பக்தர்கள் அக்னிசட்டி எடுத்தல், அலகுவேல் குத்தி வருதல், பால்குடம், மாறுவேடமணிந்து வருதல் போன்ற பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்தினர். மேளதாளம் முழங்க தாம்பாளத்தில் அர்ச்சனை பொருட்களை மஞ்சள் துணியால் கட்டி கொண்டு ஊர்வலமாக பக்தர்கள் அம்மன்குளம் வந்தனர். பின்னர் அங்கு புனித நீராடி தரிசனம் செய்துவிட்டு வரிசையில் காத்திருந்து பூக்குழி இறங்கினர். சிறுவர் முதல் முதியவர் , கைக்குழந்தைகளுடன் பெண்கள் என 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கினர். கோயில் முன்பாக காந்திநகர் பொதுமக்களால் கழுமரம் ஊன்ற காமராஜர் நகர் பொதுமக்களால் கழுகு மரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேறியதற்காக கரும்புதொட்டில் , அங்கப்பிரதட்சனம் , மாவிளக்கு , பொங்கல் வைத்து வழிபட்டனர். நேற்று இரவு கோயிலிலிருந்து கம்பம் அம்மன் குளத்தில் கொண்டு போய் சேர்க்கப்பட்டது.இன்று காலையில் மாரியம்மன் மஞ்சள் நீராடுதல் தொடர்ந்து இரவு அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் சர்வ அலங்காரத்தில் எழுந்தருள அம்மன் குளத்திலிருந்து புறப்பாடு நடைபெறும். பக்தர்கள் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மதுரை, திண்டுக்கல், காரைக்குடி, நத்தம் பகுதிக்கு கூடுதலாக அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.