வேலை வாங்கித்தருவதாக ரூ.36 லட்சம் மோசடி அரசு பஸ் கண்டக்டர் கைது
திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு வீருவீட்டில் பட்டதாரி வாலிபர்கள் மூவருக்கு பொதுப்பணித்துறையில் இளநிலை பொறியாளர் வேலை வாங்கி தருவதாக ரூ.36 லட்சம் மோசடியில் ஈடுபட்ட கணவன்,மனைவி கைது செய்யப்பட்ட நிலையில், இதில் தொடர்புடைய அரசு பஸ் கண்டக்டரையும் போலீசார் கைது செய்தனர்.வத்தலக்குண்டு வீருவீடு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் 52. அங்கு இவரது கடைக்கு வத்தலக்குண்டு அரசு பஸ் டெப்போவில் கண்டக்டராக பணியாற்றும் பெருமாள் கோவில்பட்டியை சேர்ந்த மாரிமுத்துசாமி 35, தினமும் வந்து செல்வார். அப்போது ராஜேந்திரன் பி.எஸ்.சி.,படித்த தன் மகன்கள் 2 பேர்,தம்பி மகன் ஒருவருக்கு அரசு வேலை வேண்டும் என மாரிமுத்துசாமியிடம் கூறி உள்ளார். 'தனக்கு தெரிந்த ஒருவர் இருக்கிறார். அவரிடம் பணம் கொடுத்தால் அவரது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி, தலைமை செயலக அதிகாரிகள் மூலம் பொதுப்பணித்துறையில் இளநிலை பொறியாளராக பணி வாங்கிவிடலாம் 'என ஆசை காட்டினார். இதை நம்பிய ராஜேந்திரனுக்கு மாரிமுத்துசாமி கரூரை சேர்ந்த குமாரை அறிமுகம் செய்தார். குமார் ரூ.36 லட்சம் தாருங்கள் 6 மாதத்தில் வேலை வாங்கி விடலாம் எனக்கூற ராஜேந்திரனும் பணம் கொடுத்தார். இதன்பின் மாரிமுத்துசாமி, குமார் தலைமறைவானர். ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ராஜேந்திரன் திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். இவ்வழக்கில் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி, எஸ்.ஐ.,முத்தமிழ் தலைமையிலான போலீசார் குமார், மனைவி பூமகளை ஜன.3ல் கைது செய்தனர். இதை தொடர்ந்து நேற்று அரசு பஸ் கண்டக்டர் மாரிமுத்துசாமியை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் தனது உறவினர் மகன் வேலைக்காக ரூ.7 லட்சத்தை குமாரிடம் கொடுத்தபோது குமார், வேறு யாரிடமாவது பணம் வாங்கி தந்தால் கமிஷன் தருகிறேன் எனக்கூற இவரும் ஆசையில் இந்த மோசடியில் சிக்கியது தெரியவந்தது.