கிராமப்புற பகுதிகளில் போலி டாக்டர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு; ஆய்வு மேற்கொள்வதோடு, துறை ரீதியான நடவடிக்கை தேவை
மாவட்டத்தில் தற்போது பகலில் கடுமையான வெயிலும், இரவு அதிகாலை நேரங்களில் பனி பொழிவும் நிலவு கிறது. சளி, காய்ச்சல், இருமல் போன்றவை ஏற்படுவதால் குழந்தைகள், முதியவர்கள் பெரிதும் பாதிக்கின்றனர். இவர்கள் பெரும்பாலானோர் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்வதில்லை. மருந்துக் கடைகளில் மருந்து, மாத்திரைகளை வாங்கிக்கொள்கின்றனர். இது போன்ற மக்களின் அறியாமையை பயன்படுத்தி புதிதாக போலி டாக்டர்கள் உருவாகின்றனர். பள்ளி படிப்பை முடித்தவர்களும், சித்தா படித்தவர்களும், மருந்து கடை உரிமையாளர்களும் டாக்டர்களாக மாறியுள்ளனர். ஒரு சிலர் அரசு அங்கீகாரம் பெற்ற மருத்துவர் என பெயர் பலகையை மாட்டி கிளினிக் நடத்துகின்றனர்.இவர்கள் கொடுக்கும் மருந்து சில நோய்களுக்கு உடனடியாக நிவாரணம் தருகிறது. இப்படி சிகிச்சைபெறுவோர் மேலும் பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர். உயிரிழப்பு, பெரும் அசம் பாவிதம் நடக்கும் முன் இதுபோன்ற போலி டாக்டர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.