உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / இயற்கைக்கு மாறாக விளையும் மாங்காய்கள்.. தேவை விழிப்புணர்வு! ரசாயன மருந்துகளால் மனிதர்களுக்கு பாதிப்பு

இயற்கைக்கு மாறாக விளையும் மாங்காய்கள்.. தேவை விழிப்புணர்வு! ரசாயன மருந்துகளால் மனிதர்களுக்கு பாதிப்பு

மாவட்டத்தில் நத்தம், சாணார்பட்டி, கோபால்பட்டி, செந்துறை, அய்யலூர், பழநி, ஆத்துார் சுற்று கிராமங்களின் மக்களின் பிரதான தொழிலாக இருப்பது மா விவசாயம். இப்பகுதி விவசாயிகளில் 60 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் மா விவசாயமே செய்கின்றனர். மா மரங்கள் குன்றுகள் ,மலைகளில் நட்டு வளர்ப்பது எளிதாக இருப்பதோடு மானாவாரி முறையில் வளர்க்கப்படுகிறது. இதனால் நத்தம் வட்டத்தில் மட்டும் மா மரங்கள் 7080 எக்டேர் , சாணார்பட்டி வட்டத்தில் 5004 எக்டேரில் விவசாயம் நடக்கிறது. இங்கு காசா, கல்லாமை, செந்துாரம், பங்கன பள்ளி, அல்போன்சா, பென்னட் அல்போன்சா, டங்கன், மரகதம், தங்க கட்டி, இமான் பசந்த், மல்கோவா, நீலம், ரூபி என 20க்கு மேற்பட்ட வகை மாங்காய்கள் விளைவிக்கப்படுகிறது.மா மரங்கள் ஆண்டுக்கு இருமுறை பலன் தருகிறது.தற்போது மா விவசாயிகள் குறிப்பிட்ட ரசாயன மருந்துகளை பயன்படுத்தி விளைச்சல் செய்து வருகின்றனர். இந்த மருந்தை பயன்படுத்துவதன் மூலம் ஆண்டு முழுவதும் எப்போது வேண்டுமானாலும் இயற்கைக்கு மாறாக மா விளைச்சல் இருக்கும். அவ்வப்போது மா மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச தவறினால் மரம் பட்டுப் போய்விடும் நிலை உள்ளது. முன்பெல்லாம் பூச்சி மருந்துகளை தெளிப்பார்கள். வாரம் ஒரு முறை என பத்திற்கு மேற்பட்ட முறை ரசாயன பூச்சி மருந்துகளை தெளித்து வருகின்றனர். இயற்கைக்கு மாறாக ஆண்டு முழுவதும் மாங்காய் அறுவடை செய்யும் நோக்கில் இந்த முறையை பின்பற்றுவதால் எதிர்காலத்தில் மாமரங்களின் நிலை கேள்விகுறியாகும். ரசாயன மருந்துகளால் மட்டுமே வளரும் இந்த மாங்காய்களை உட்கொள்வதால் மனிதர்களுக்கும் பாதிப்பு வாய்ப்பு உள்ளது. தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் ,மருத்துவ ஆய்வாளர்கள் ஆய்வு செய்து இயற்கை விவசாய முறையை பின்பற்ற மா விவசாயிகளுக்கு எடுத்துரைக்க வேண்டும். இதன் மீது மாவட்ட நிர்வாகமும் முனைப்பு காட்ட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை