முகம் சுளிக்கும் மசாஜ் மையங்கள்; நெரிசலால் அவதி கொடைக்கானல் 8 வது வார்டில் தொடரும் அவலம்
கொடைக்கானல்: கொடைக்கானலில் ஜனரஞ்சகமான பகுதியாக இருப்பது 8 வது வார்டாகும்.இதில்அண்ணாசாலை, முதலியார்புரம் 1 முதல் 4 தெருக்கள், லாஸ் காட் ரோடு, பிடி ரோடு உள்ளிட்ட பகுதிகளை கொண்ட இந்த வார்டில் போலீஸ் ஸ்டேஷன், சார் பதிவாளர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம்,வணிக வளாகங்கள், வங்கிகள், அரசு மருத்துவமனை ,தினசரி காய்கறி மார்க்கெட், வாரச்சந்தை, சுற்றுலா அலுவலகம் உள்ளது.இங்கு ரோட்டோரம் நிறுத்தப்படும் வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.சேதமடைந்த ரோடுகளால் மக்கள் பாதிக்கின்றனர், மசாஜ் மையங்களால் முகம் சுளிக்கும் நிலை உள்ளது .அரசு குடியிருப்புகள் புதர் மண்டி காணப்படுகிறது.தினசரி காய்கறி மார்க்கெட் திறக்கப்பட்டு ஓராண்டுக்கு மேலாகியும் பயன்பாடு இன்றி சமூக விரோத செயல்கள் மற்றும் பாராக பயன்படுகிறது.காட்டு மாடு, தெரு நாய் தொந்தரவுகளால் குடியிருப்புவாசிகள் அவதிப்படுகின்றனர். அரசு மருத்துவமனை வளாகப் பகுதியில் திறந்தவெளியில் கழிவுநீர் செல்வதால் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது. தெருவிளக்குகள் சரிவர எரிவதில்லை. அரசு மருத்துவமனை வரும் பார்வையாளர்கள் தங்கும் விடுதி திறக்கப்பட்டு பயன்பாடின்றி உள்ளது. அண்ணாசாலையில் சிறுநீர் கழிக்க இடமின்றி பொது இடங்களை பயன்படுத்தும் அவலம் உள்ளது. தள்ளாடும் குடிமகன்கள் தொல்லை என சமூக விரோத செயல்கள் உள்ளிட்ட ஏராளமான பிரச்னைகள் வார்டில் உள்ளன. கண்டுகொள்வதில்லை
சுருளியம்மாள், கூலித் தொழிலாளி : குடியிருப்பு பகுதியில் பொது கழிப்பறை வசதியின்றி இருபாலரும் அவதிப்படும் நிலை உள்ளது. குடிநீர் குழாய் தனி இணைப்பு இல்லாத நிலையில் தெரு குழாயில் நீண்ட நேரம் நின்று குடிநீர் பிடிக்கும் அவலம் உள்ளது.முதலியார்புரம் குடியிருப்பு பகுதிகளில் சுற்றிய அரசு குடியிருப்புகளில் புதர்மண்டி உள்ளதால் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்து நடமாட்டங்களால் பீதியில் உள்ளனர். சாக்கடை வசதியின்றி அவதிப்படுகிறோம். குடியிருப்புக்கு அருகில் உள்ள கொண்டித் தொழுவம் பயன்பாடின்றி உள்ளது. கவுன்சிலரிடம் கோரிக்கைகள் வைத்த போதும் கண்டுகொள்வதில்லை. பைப்களால் விபத்து
பாலசுப்பிரமணி,வியாபாரி : வார்டில் செயல்படும் மசாஜ் மையங்களால் குடியிருப்புவாசிகள் முகம் சுளிக்கும் நிலை உள்ளது.அண்ணா சாலை பகுதியில் ரோட்டில் நிறுத்தும் வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் நாள்தோறும் இங்கு அரசு அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு வருகை தரும் பொதுமக்கள் அவதிப்படும் நிலையில் உள்ளது. அண்ணா சாலை ரோட்டில் உள்ள கேட் வால்வு பைப்கள் விபத்து ஏற்படுத்துவதாக உள்ளது. கனரா வங்கி எதிரே சேதமடைந்த ரோடு சீரமைக்காமல் இருப்பதை சீர் செய்ய வேண்டும். நவீனப்படுத்த நடவடிக்கை
அப்பாஸ் அலி, கவுன்சிலர் (தி.மு.க.,) : ரூ.10 கோடிக்கு வளர்ச்சி பணிகள் செய்யப்பட்டுள்ளது.அண்ணா சாலை பகுதியில் தொடரும் போக்குவரத்து நெரிசலை சீர் செய்ய மாற்று ஏற்பாடுகள் குறித்து நகராட்சியில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. வார்டில் செயல்படும் மசாஜ் மையங்கள் குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள கொண்டு தொழுவம் வேறு பயன்பாட்டிற்காக நவீனப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். வார்டில் உள்ள புதர்களை மாதம்தோறும் அகற்றி பராமரிப்பு பணி செய்து வருகிறோம். மருத்துவமனை வளாக பகுதியில் செல்லும் கழிவுநீர் திறந்தவெளியில் செல்வதை கட்டுப்படுத்த வாய்க்கால் கட்டமைக்கப்பட்டு வருகிறது என்றார்.