முகாம் மனுக்கள் மீது முதல்வர் கவனம் அமைச்சர்பெரியசாமி தகவல்
கன்னிவாடி : சிறப்பு முகாமில் பெறப்படும் ஒவ்வொரு மனுவும் முதல்வரின் நேரடி கவனத்திற்கு செல்கிறது, என அமைச்சர் பெரியசாமி பேசினார். கசவனம்பட்டியில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமை துவக்கி வைத்து அவர் பேசியதாவது: இது போன்ற முகாம்களில் பெறப்படும் ஒவ்வொரு மனுவும் முதல்வரின் நேரடி கவனத்திற்கு செல்கிறது. இவற்றுக்கான நடவடிக்கை துரிதமாக மேற்கொள்ளப்பட்டு உரிய பலன் வீடு தேடி வந்து சேரும். தமிழகம் முழுவதும் ஒரு கோடியே 16 லட்சம் மகளிருக்கு இதுவரை உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. விடுபட்டோருக்கான உரிமைத் தொகை வழங்குவதற்கு இது போன்ற முகாம்களில் பெறப்படும் மனுக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது என்றார். ஆர்.டி.ஓ., சக்திவேல் தலைமை வகித்தார். ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் திலகவதி முன்னிலை வகித்தார். தாசில்தார் ஜெயபிரகாஷ் வரவேற்றார். பி.டி.ஓ.,க்கள் மலரவன், கண்ணன் பங்கேற்றனர்.