பஸ் வசதி இல்லை... தெருநாய்கள் அட்டூழியம் கொடைக்கானல் 9வது வார்டில் அவதி
கொடைக்கானல்: பஸ் வசதி இல்லை, தெருநாய்கள் அட்டூழியம் என கொடைக்கானல் நகராட்சி 9 வது வார்டு மக்கள்அவதிப்படுகின்றனர்.விஜிபி, அப்பர் லேக் வியூ உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய இந்த வார்டில் சரிவர குப்பை அள்ளப்படாது சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. அதிவேகமாக இயக்கப்படும் வாகனங்களால் விபத்து அபாயம உள்ளது. இல்லம் தேடி ரேஷன் பொருட்கள் சப்ளை செய்வதில் குளறுபடி நடக்கிறது . வார்டில் நடக்கும் சமூக விரோத செயல்களை கண்காணிக்க சிசிடிவி கேமரா அமைக்க வேண்டும். தெருவிளக்கு சரிவர எரிவதில்லை. காலை 8:30 மணிக்கு மட்டுமே பஸ் வசதி உள்ள நிலையில் மாணவர்கள், பொதுமக்கள் வாடகை வாகனங்களில் நகர் பகுதிக்கு வந்தடையும் நிலை உள்ளது. கூடுதல் பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும். 2 நாளுக்கு ஒருமுறை குடிநீர்
யோவான், அ.தி.மு.க., மாணவரணி இணைச் செயலாளர் :குடிநீர் நாள்தோறும் வழங்கப்பட்ட நிலையில் தற்போது 2 நாளைக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. அதுவும் அரை மணி நேரமே சப்ளையாகிறது. இதை கூடுதல் நேரமாக சப்ளை செய்ய வேண்டும். தெரு நாய்கள் தொல்லையால் பள்ளி மாணவர்கள், குடியிருப்புவாசிகள் அவதிப்படும் நிலை உள்ளது. இங்கு வசிக்கும் பொதுமக்களை தெரு நாய்கள் அச்சுறுத்த ஏராளமானோர் காயம் அடைந்துள்ளனர். காட்டுப்பன்றி தொல்லை
விக்டர், வியாபாரி: ஏராளமான வட மாநிலத்தவர் வருகை புரிந்துள்ளதால் இவர்களின் நடவடிக்கையை கண்காணிக்க வேண்டும். அதிவேகமாக இயக்கப்படும் வாகனங்களால் பொதுமக்கள் விபத்துக்குள்ளாகும் அபாய நிலை உள்ளது. வார்டில் உள்ள தனியார் பள்ளி ரோட்டில் காலை, மாலையில் அதிவேகமாக வாகனங்களை இயக்கும் போக்கு உள்ளது. இப்பகுதியில் காட்டுப்பன்றி தொல்லைகள் அதிகம் உள்ளதால் குடியிருப்புவாசிகள் அவதிப்படுகின்றனர். விளக்குகள் எரிகின்றன
விஜி, கவுன்சிலர் (தி.மு.க., ): ரூ.2 கோடிக்கு வளர்ச்சி பணிகள் செய்யப்பட்டுள்ளன. ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் சப்ளை செய்யப்பட்ட நிலையில் தற்போது வறட்சி ஏற்பட்டுள்ளதால் 2 நாளைக்கு ஒரு முறை 2 மணி நேரம் வார்டு முழுவதும் தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. தெருநாய்கள் கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தி கட்டுப்படுத்தி வருகிறோம். கூடுதல் பஸ் வசதி ஏற்படுத்தப்பட்டும் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்கவில்லை. மீண்டும் இதற்கான முயற்சி எடுக்கப்படும். குப்பை அள்ளப்படுகின்றன. அதிவேகமாக வாகனங்களை இயக்குபவர்கள் குறித்தும் போலீஸ் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். தெரு விளக்குகள் எரிகின்றன.