| ADDED : மே 29, 2024 06:06 PM
திண்டுக்கல்: டில்லி மருத்துவமனை தீ விபத்து சம்பவம் எதிரொலியாக திண்டுக்கல் நகரில் செயல்படும் தனியார் மருத்துவமனைகள் தங்கள் மருத்துவமனை முழு விபரங்களையும் அறிக்கை மூலமாக சமர்பிக்க மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.டில்லியில் செயல்படும் தனியார் மருத்துவமனை ஒன்றில் மே 27ல் ஏற்பட்ட தீவிபத்தில் பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக இறந்தனர். இதன் எதிரொலியாக தமிழகத்தில் செயல்படும் தனியார் மருத்துவமனைகள் முறையாக அனுமதி பெற்றுள்ளார்களா,கட்டடம் முடிக்கப்பட்ட ஆண்டு,வாகனங்கள் நிறுத்தம் குறித்த வரைபடம்,வெளிப்புற நோயாளிகளுக்கான அடிப்படை வசதிகள் உள்ளதா,உள் நோயாளிகளின் படுக்கை வசதி,கழிப்பறை,குடிநீர் வசதிகள் உள்ளதா,மருத்துவமனையின் தற்போதைய உறுதித்தன்மை,தீயணைப்புத் துறையிடம் வாங்கிய அனுமதி சான்று,சுகாதாரம்,மருத்துவ கழிவுகளை அப்புறப்படுத்தும் விபரங்கள் அடங்கிய அறிக்கையை தயார் செய்து அந்தந்த உள்ளாட்களிடம் ஒப்படைக்க அரசு உத்தரவிட்டது. அதன்படி திண்டுக்கல் நகரில் செயல்படும் தனியார் மருத்துவமனைகளை கணக்கெடுத்து அதன் நிர்வாகத்திடம் இதற்குரிய நோட்டிஸ் வழங்கி அதன் விபரங்களை அறிக்கையாக பெற வேண்டும் என அலுவலர்களுக்கு மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் உத்தரவிட்டார். நகர திட்டமிடுநர் ஜெயக்குமார் தலைமையிலான அதிகாரிகள் நேற்று அதற்குரிய பணியில் ஈடுபட்டனர். 50 மருத்துவமனைகள் நகரில் செயல்படும் நிலையில் முதல் கட்டமாக 19 மருத்துவமனைகளுக்கு அறிக்கை சமர்பிப்பதற்கான நோட்டிசை வழங்கினர். 3 நாட்களுக்குள் இதற்கான அறிக்கையை சமர்பிக்க வேண்டும் இல்லையென்றால் அதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.