குளம் போல் மழை நீர்; இருளால் தினமும் அச்சம் தனித்தீவு போல் வாழும் ஜி.எஸ்.நகர் குடியிருப்போர்
திண்டுக்கல்: குடியிருப்பு பகுதியில் குளம் போல் தேங்கி நிற்கும் தண்ணீர், துார்வாரப்படாத சாக்கடை, விளக்குகள் இல்லாதததால் அனுதினமும் அச்சம் என பல்வேறு பிரச்னைகளோடு திண்டுக்கல் ஜி.எஸ்., நகர் குடியிருப்பு வாசிகள் வாழ்ந்து வருகின்றனர்.திண்டுக்கல் - பழைய கரூர் ரோட்டில் உள்ள ஜி.எஸ். நகர் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் கண்ணன், செயலாளர் சிவலிங்கம், பொருளாளர் கணேசன், உறுப்பினர்கள் விஜய், குமார் கூறியதாவது: புறநகர் பகுதியில் உள்ள எங்கள் குடியிருப்பு பகுதிகளை யாரும் கண்டு கொள்வதில்லை. வீடுகளுக்கு இடையே உள்ள காலியிடங்களில் மழைநீர், கழிவுநீர் தேங்கி நிற்கிறது. மழை நீர் தேக்கத்தால் ஒரு வீட்டுக்கும் இன்னொரு வீட்டுக்கும் உள்ள இடைவெளி ஒரு தீவில் இருந்து இன்னொரு தீவிற்கு செல்வது போல் உள்ளது.காலியிடங்களில் தேங்கி நிற்கும் நீரால் கொசு உற்பத்தியாவதோடு நோய் தொற்று அபாயம் உள்ளது. மழைகாலங்களில் இந்த நீர் ரோட்டில் வெள்ளம் போல் ஓடுகிறது. 10 தெருக்கள் உள்ள எங்கள் குடியிருப்பு பகுதியில் ஒரு தெருவிலும் ரோடுகள் சரியில்லை. மேடு, பள்ளமாக காட்சியளிக்கிறது. மழைகாலங்களில் பள்ளங்களில் நீர் தேங்கி சென்று வரவே சிரமமாக உள்ளது. குடியிருப்பையொட்டிய பின்பகுதியில் ஓடும் சாக்கடை ஆங்காங்கே உடைந்துவிட குடியிருப்புக்குள் கழிவுநீர் வந்து விடுகிறது. இதை துார்வாரி சரிசெய்தால் கழிவுநீர் வருவது தவிர்க்கப்படும். பலமுறை கோரிக்கை வைத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை.பிரதான ரோட்டையொட்டி குடியிருப்பு அமைந்துள்ளது. ஆனால் ரோட்டில் ஒரு விளக்கு கூட இல்லை .அருகே உள்ள கல்லுாரியில் உள்ள வெளிச்சம் மட்டுமே இருக்கிறது. இரவு நேரங்களில் இருள் சூழந்துள்ளதால் பெண்கள், குழந்தைகள் சென்று வர அச்சப்படுகின்றனர். மழைகாலம் வந்தாலே குடியிருப்பு பகுதியே தனித்தீவு போல் மாறி விடுகிறது. கொசுமருந்துகள் அடிப்பது என்ற பேச்சுக்கே இடமில்லாத சூழல் தான் நிலவுகிறது. குப்பைத் தொட்டிகள் எங்குமே இல்லை. நாங்களே கொண்டு சென்று வேறு இடத்தில் கொட்டி வரும் நிலை இருக்கிறது. குப்பை அள்ள எங்கள் பகுதிக்கு எவருமே வருவதில்லை. போதிய அடிப்படை வசதிகளும் இப்பகுதியில் இல்லை. எல்லாம் நாங்களே செய்து கொள்ள வேண்டியதாக இருக்கிறது என்றனர்.