அரசியல் காரணத்திற்காக தேசிய கல்வி கொள்கையை ஏற்க மறுக்கிறார்கள்
திண்டுக்கல் : ''தேசிய கல்வி கொள்கையை ஏற்பதாக தமிழக அரசு ஒப்புக்கொண்டு கையொப்பமிட்ட பின் அரசியல் காரணங்களுக்காக ஏற்க மறுக்கிறார்கள்'' என பா.ஜ., மாநில துணைத்தலைவர் கனகசபாபதி தெரிவித்தார்.திண்டுக்கல்லில் அவர் கூறியதாவது : பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கவில்லை என தி.மு.க.,வினர் பொய் பிரசாரம் செய்கின்றனர். முத்ரா வங்கி கடன் திட்டத்தில் தமிழகம் தான் அதிகம் பயன் பெற்றுள்ளது. சிறு, குறு தொழில் துவங்க அதிகமான நிதியை இங்குள்ளவர்கள் தான் பெற்றுள்ளனர். இத்தனை ஆண்டு கால வரலாற்றில் பி.எஸ்.என்.எல்., உட்பட பல்வேறு பொதுத்துறை நிறுவனங்கள் லாபகராமாக மாற்றியுள்ளது பிரதமர் மோடி அரசுதான். தமிழக அமைச்சர்களின் பிள்ளைகள் படிக்கும் தனியார் பள்ளிகளில் மும்மொழிகள் பயிற்றுவிக்கலாம். எங்கள் வீட்டுக் குழந்தைகள் பயிலும் அரசுப் பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம், 3வதாக ஒரு இந்திய மொழி என மும்மொழிகள் கற்பிக்கக் கூடாது என்பது சரியல்ல. ஏழை மாணவர்கள் அனைத்து மொழிகளும் தெரிந்து கொள்ள கூடாது என நினைக்கின்றனர். தேசிய கல்விக் கொள்கையை ஏற்க தமிழக அரசு மறுக்கிறது. அதனால் விதிமுறைகளின்படி நிதி ஒதுக்க முடியாது என அமைச்சர் கூறியுள்ளார். இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்கள் தேசிய கல்வியைக் கொள்கையை ஏற்கும்போது தமிழகம் மட்டும் அதற்கு மறுப்பு தெரிவிப்பது சரியானதல்ல. முதலில் கல்விக் கொள்கையை ஏற்பதாக தமிழக அரசு ஒப்புக்கொண்டு கையொப்பமிட்டது. அதன்பின் அரசியல் காரணங்களுக்காக ஏற்க மறுக்கிறார்கள். இது அவர்களின் தவறு. இதில் தமிழக அரசுதான் அரசியல் செய்கிறது. அவர்களுக்கு தமிழக வளர்ச்சியின் மீது அக்கறை இல்லை என்றார்.