பிற மொழி இலக்கியங்களை மொழி பெயர்த்து ஆய்வு நார்வே ஒஸ்லோ பல்கலை ஆய்வாளர் வலியுறுத்தல்
சின்னாளபட்டி: ''பிற மொழி புலம்பெயர்ந்தோர் இலக்கியங்களையும் மொழி பெயர்த்து ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்'' என நார்வே ஓஸ்லோ பல்கலை பட்ட ஆய்வாளர் சர்வேந்திரா தர்மலிங்கம் பேசினார்.காந்திகிராம பல்கலையில் தமிழ் துறை சார்பில் புலம்பெயர்ந்தோர் ஆய்வு மைய தொடக்க விழா, தமிழில் புலம்பெயர்ந்தோர் இலக்கியமும் பண்பாட்டு அடையாளம் என்ற தலைப்பில் நடந்த பன்னாட்டு கருத்தரங்கில் அவர் பேசியதாவது: விரும்பி புலம் பெயர்ந்தோருக்கும், போர் சூழலால் கட்டாயமாக புலம் பெயர்ந்தோருக்குமான அடிப்படை வேறுபாட்டை புரிந்து கொள்ள வேண்டும். புலம்பெயர்ந்த மக்கள் அந்தந்த நாட்டின் பண்பாட்டை ஏற்றுக் கொள்வதிலும் தாயகப் பண்பாட்டை கையாள்வதிலும் உள்ள சிக்கல்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை. தமிழில் படைக்கப்பட்ட புலம்பெயர் மக்களின் இலக்கியங்களை மட்டும் கருத்தில் கொள்ளாமல் பிற மொழிகளில் படைத்த புலம்பெயர்ந்தோர் இலக்கியங்களையும் மொழி பெயர்த்து ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்றார். இலங்கை தென்கிழக்கு பல்கலை விரிவுரையாளர் செல்வகுமாரி சிவலிங்கம், ஹாங்காங் தமிழ் பண்பாட்டு இயக்க தலைவர் மெய்.சித்ரா, லண்டன் எழுத்தாளர் ரவி அருணாச்சலம், விரிவுரையாளர் கலைமகள், விமர்சகர் முருகேசபாண்டியன், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை முன்னாள் தமிழ்துறை தலைவர் ராமசாமி படைப்புகளை சமர்ப்பித்தனர்.பல்கலை துணை வேந்தர் பஞ்சநதம் தலைமை வகித்தார். பொறுப்பு பதிவாளர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.பேராசிரியர்கள் முத்தையா, உதவி பேராசிரியர் சிதம்பரம் பேசினர்.நுண்கலைகள் துறை பேராசிரியர் கேசவராஜராஜன் வரவேற்றார். ஹிந்தித்துறை தலைவர் மொகல்சலீம்பெய்க் நன்றி கூறினார்.