தனி வகுப்பறை கோரி மாணவர்கள் மறியல்
வடமதுரை: அய்யலுார் பள்ளியில் தனி வகுப்பறை கோரி மாணவர்கள் ரோடு மறியலில் ஈடுபட்டனர். அய்யலுார் அரசு மேல்நிலைப் பள்ளியில் வகுப்பறை பற்றாக்குறையால் புதிய கட்டடம் கட்டும் பணி நடக்கிறது. இதில் 11ம் வகுப்பு மாணவர்களின் வகுப்பறையில் ஸ்மார்ட் கிளாஸ் அமைக்கும் பணி துவங்கியது. இதற்காக அங்கிருந்த மாணவர்கள் மற்றொரு வகுப்பறை மாணவர்களுடன் சேர்ந்து உட்கார வைத்தனர். ஆத்திரமடைந்த மாணவர்கள் தங்களுக்கு தனி வகுப்பறை கோரி ஆசிரியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் 11, 12ம் வகுப்பு மாணவர்கள் பஞ்சந்தாங்கி ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். பள்ளி ஆசிரியர்கள் சமாதானம் செய்து போராட்டத்தை கைவிட செய்தனர். இதை தொடர்ந்து பழைய பொருட்கள் வைத்திருந்த அறையை சுத்தம் செய்து மாணவர்களுக்கு வகுப்பறை ஏற்படுத்தி தரப்பட்டது.