கற்கள் பெயர்ந்து நடப்பதற்கே பயனற்ற நல்லமநாயக்கன்பட்டி ரோடு
வேடசந்துார்: நல்லமநாயக்கன்பட்டி செல்லும் தார் ரோடு கற்கள் பெயர்ந்து சேதமடைந்துள்ளதால் நடப்பதற்கே பயனற்று உள்ள நிலையில் மினி பஸ் சேவையும் நிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் குமுறுகின்றனர். வேடசந்துார் ஒன்றியம் இ.சித்துார் ஊராட்சி நல்லமநாயக்கன்பட்டி சுற்று பகுதியில் ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் உள்ளன. வேடசந்துார் எரியோடு ரோட்டில் அரசு கல்லுாரியை அடுத்து இந்த ஊருக்கு செல்வதற்கான தார் ரோடு பிரிந்து செல்கிறது. மூன்று கி.மீ., துாரம் கொண்ட இந்த ரோடு 10 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டதால் தற்போது கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இந்த வழித்தடத்தில்தான் வேடசந்தூர் எரியோடு செல்லும் மக்கள் வந்து செல்ல வேண்டும். ஏரியோடு அரசு மேல்நிலைப்பள்ளிக்கு இப்பகுதியில் இருந்து 200 க்கு மேற்பட்ட மாணவர்கள் கள், காலை , மாலை நேரங்களில் நடந்தே செல்கின்றனர். கூடுதலான மக்கள் வந்து செல்லும் இந்த ரோட்டில் அரசு டவுன் பஸ், மினி பஸ் வசதி எதுவும் தற்போது இல்லை. இதனால் டூவீலர்களில் வருவோரை எதிர்பார்த்து நடந்து செல்வோர் காத்திருக்கின்றனர். ரோடு சேதத்தால் டூவீலர்களில் செல்வோர் அவதிக்கு ஆளாகின்றனர். இப்பகுதி மக்களின் நலன் கருதி இந்த ரோடை விரைந்து புதுப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.