9 பேரை கடித்த தெரு நாய்கள் சுற்றுலா பயணிகள் அச்சம்
கொடைக்கானல்:கொடைக்கானலில் தெருநாய்கள் கடித்ததில் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் என 9 பேர் காயமடைந்தனர். கொடைக்கானல் நகராட்சி பகுதியில் பெருகியுள்ள தெரு நாய்களால் பொதுமக்கள் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. அதுகுறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்தும் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை.நேற்று சீனிவாசபுரம், ஆனந்தகிரி 4வது தெரு, அண்ணாநகர், காமராஜர் சாலை பகுதியில் சென்ற பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் மொத்தம் 9 பேரை தெருநாய்கள் கடித்துள்ளது. காயமடைந்தவர்கள் இங்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். நகராட்சி தலைவர் செல்லத்துரை கூறுகையில்,'' தெருநாய் கடித்து சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் காயமடைந்துள்ளனர். நகராட்சி பணியாளர்கள், தீயணைப்புத்துறை மூலம் கடித்த நாய்களை பிடிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது'' என்றார்.