மேலும் செய்திகள்
மருத்துவமனையை தரம் உயர்த்த கையெழுத்து
21-Sep-2025
வத்தலக்குண்டு:வத்தலக்குண்டு பஸ் ஸ்டாண்டில் முதியவரிடம் இளைஞர் ஒருவர் உதவி செய்வது போல் நடித்து ரூ. 10 லட்சத்தை கொள்ளையடித்து சென்றார். புகார் அளித்த இரண்டு மணி நேரத்தில் வத்தலக்குண்டு போலீசார் பணத்தை மீட்டனர். மதுரை மாவட்டம், வாடிப்பட்டியைச் சேர்ந்தவர் பரமசிவம் 80. கோவையில் உள்ள தனது மகன் வீட்டிற்கு சென்று விட்டு திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் உள்ள வங்கிக் கணக்கில் செலுத்த ரூ.10 லட்சம் பணத்துடன் வத்தலக்குண்டு பஸ் ஸ்டாண்ட் வந்தார். இரவு நேரம் என்பதால் வத்தலக்குண்டில் தங்கி விட்டு காலையில் வங்கிக்கு செல்ல திட்டமிட்டார். லாட்ஜிற்கு நடந்து சென்ற போது முதியவருக்கு இளைஞர் ஒருவர் உதவி செய்தார். பரமசிவம் அசந்த நேரத்தில் ரூ. 10 லட்சம் பணம் வைத்திருந்த பெட்டியுடன் அந்த இளைஞர் மாயமானார். பரமசிவம் வத்தலக்குண்டு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கவுதமன் மற்றும் எஸ்.ஐ.,ஷேக் அப்துல்லா தலைமையிலான போலீசார் அப்பகுதி கேமரா காட்சிகளை சோதனையிட்டபோது, அந்த இளைஞர் ஒரு ஆட்டோவில் தப்பி சென்றது தெரிந்தது. விசாரணையில், தப்பிய இளைஞர் சாமியார் மூப்பனூரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி 31 என்பது தெரியவந்தது. அவரின் வீட்டை சோதனை செய்தபோது முதியவரிடம் கொள்ளையடிக்கப்பட்ட ரூ. 10 லட்சம் பணம் பெட்டியுடன் இருந்தது. அதை மீட்ட போலீசார் தப்பியோடிய கிருஷ்ணமூர்த்தியை தேடி வருகின்றனர்.
21-Sep-2025