உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஆவினக்குளம் மதகுகள் சேதத்தால் பயிர்களில் பாயும் தண்ணீர்

ஆவினக்குளம் மதகுகள் சேதத்தால் பயிர்களில் பாயும் தண்ணீர்

திண்டுக்கல் : மதகுகள் இன்றி விவசாய நிலத்திற்குள் புகும் தண்ணீர் , துார்வாரப்படாத வரத்து கால்வாய்கள் என பல்வேறு பிரச்னைகளை கொண்டுள்ளது காமாட்சிபுரம் அருகே உள்ள ஆவினக்குளம்.திண்டுக்கல் புறநகர் பகுதியில் அணைப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட காமாட்சிபுரத்தில் உள்ளது ஆவினக்குளம் கண்மாய். ஒரு காலத்தில் குடிநீர் ஆதாரமாகவும், விவசாய மக்களின் தண்ணீர் பிரச்னையை தீர்க்கும் அட்சய பாத்திரமாக இருந்து வந்த இந்த குளம் தற்போது' எப்படி இருந்த நான் இப்படி ஆகி விட்டேன் ' என்ற பரிதாப நிலையில் உள்ளது.சுற்றுப் பகுதிகளில் உள்ள 80 ஏக்கர் விவசாய நிலங்களுக்கும் இங்கிருந்தான் நீர் சென்றிருக்கிறது. இன்று நீர் இருந்தாலும் போதிய பராமரிப்பின்றி உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு மதகுகள் சேதமடைந்ததால் புதிதாக அமைக்க வெறும் அறிவிப்போடு நின்று விட்டன. அதற்குபின் எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை.இதனால் சிறு மழை பெய்தால் கூட குளம் நிரம்பி மறுகால் பாய்ந்து விவசாய நிலத்திற்குள் நீர் புகுந்து விடுகிறது. இதன் காரணமாக பல ஏக்கர் பயிர்கள் வீணாகின. இதனால் விவசாயிகள் விவசாயத்தை விட்டு விட்டனர். மதகுகள் அமைக்க பலமுறை கோரிக்கை வைத்தும் எந்த பயனும் இல்லை என்கின்றனர் இப்பகுதி விவசாயிகள். அதேபோல் இந்தகுளம் துார்வாரப்படவும் இல்லை. அவ்வப்போது சரியும் மணல்கள் குளத்தை மேடாக்குவதோடு சகதியாக்கி விடுகின்றன.கரைகள் முழுவதும் முற்காடுகளாக மாறி விட்டன. நடந்து செல்வது கூட கடினமான ஒன்றாக உள்ளது.கருவேலம் செடிகள் அதிகளவில் இருப்பதால் நீர் உறிஞ்சி அவை நன்றாக வளர்ந்துள்ளன. கால்வாய்களை சரிவர வெட்டாததால் தண்ணீர் எந்தப்பக்கம் செல்லும் என்றே கணிக்க முடியாத சூழலும் நிலவுகிறது.

மதகுகள் அமையுங்க

அருளப்பன், விவசாயி : குளத்திற்கு முக்கியமனது மதகுகள் தான். மதகு இல்லாததால் பயிரிட்ட நிலத்திற்குள் தண்ணீர் புகுந்து அனைத்தும் வீணாகிறது. 3 ஆண்டுகளாக தொடர்ந்து இப்பிரச்னை நடக்கிறது. மதகு அமைத்து தேவைப்படும்போது நீரை திறந்து விட்டாலே போதும் விவசாயம் செழிக்கும். நெல் விளைந்த பூமி தற்போது புதர் மண்டி கிடக்கிறது. எவ்வளவோ முறையிட்டும் எட்டாக்கனியாகவே உள்ளது. நாங்களும் செலவு செய்ய தயாராக இருக்கிறோம். அரசின் ஒத்துழைப்போடு பணிகள் நடந்தால் நாங்கள் மீண்டும் விவசாயம் செய்வோம்.

தேவை நிரந்தர கால்வாய்

- மணி, விவசாயி, அணைப்பட்டி: குளம் நிரம்பி மறுகால் பாய்வது வழக்கம் தான். ஆனால் கால்வாய்கள் முறையாக இருந்தால் அதனை சரிசெய்ய முடியும். அனைத்து நிலத்திற்கும் செல்லும்படி சிமென்டில் கால்வாய் அமைத்தால் அனைவருக்குமே பயன்படும். தண்ணீர் இல்லாத நேரங்களிலும் மாற்று வழி மூலமாகவும் வயலுக்கு நீர் பாய்ச்சலாம். நாங்களும் சரியாக பராமரித்துக் கொள்வோம்.

கரை களை பலப் படுத்துங்க

ராஜா, விவசாயி, காமாட்சிபுரம் : கரைகளை பலப்படுத்த வேண்டும். நகர் பகுதிகளில் வாக்கிங் போவதற்காகவே சில குளங்களை சுற்றி வேலிகள் அமைந்து பேவர் பளாக் கற்களால் அலங்கரிக்கின்றனர். இயற்கை சூழ்ந்த பகுதிகளில் இதுபோன்ற பணிகளை மேற்கொள்ளலாம். குளத்தை துார்வாரி நடைபாதைகள் அமைத்தால் வயல்வெளிக்கு மத்தியில் ஒரு அழகிய சுற்றுலாத்தளம் போல காட்சியளிக்கும். விவசாய மக்கள் ஒத்துழைப்பு தருகிறோம். குளத்தை சீரமைத்தால் போதும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை