ஈரோடு, திருப்பூர் மாவட்டத்தில் நாய்கள் கடித்து 1,217 கால்நடைகள் பலி
ஈரோடு: ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டத்தில், நாய்கள் கடித்ததில் ஆடு, மாடு உள்ளிட்ட, 1,217 கால்நடைகள் இறந்ததால், விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் கவலை அடைந்துள்ளனர்.ஈரோடு மாவட்டம் சென்னிமலை, பெருந்துறை, காஞ்சிகோவில், நசியனுார் உள்ளிட்ட பகுதிகளிலும், திருப்பூர் மாவட்டம் காங்கேயம், வெள்ளகோவில் பகுதியிலும் தெரு நாய்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளன. இவை வெறிநாய்களாக மாறி, ஆடு, மாடு, கோழிகளை கடித்து கொல்வது அதிகரித்துள்ளது.வாழ்வாதாரத்துக்காக ஆடு, மாடு, கோழிகளை ஏழை விவசாயிகள் வளர்க்கின்றனர். சில நேரங்களில் நோய் தாக்குதலால் இவை இறக்கும். அப்போது அரசு சார்பில் சொற்ப தொகை இழப்பீடாக கிடைத்தாலும், அவர்கள் மீண்டு வருவது பெரும் சிரமம்.இதற்கெல்லாம் மேலாக தற்போது ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் கால்நடைகளை நாய்கள் கடித்து குதறுவதும், அரசு சார்பில் இழப்பீடு கிடைக்காததும் துயரமாக உள்ளது.இதுபற்றி, கால்நடை டாக்டர்கள் கூறியதாவது: கிராமங்களிலும், நகரங்களிலும் வீட்டு நாய்கள், தெரு நாய்களுக்கும் உணவு கிடைப்பதில் எவ்வித சிக்கலும் இல்லை. கட்டுப்பாடின்றி தொடர்ந்து இனப்பெருக்கம் செய்வதால், எண்ணிக்கை அதிகரிக்கிறது. நாய்களுக்கு பிடித்த உணவு பற்றாக்குறை, எண்ணிக்கை அதிகரிப்பு, கூட்டமாக சேரும்போது வேட்டையாடும் குணம் ஏற்படுகிறது.ஆடு, மாடு, கோழி, சில நேரங்களில் மனிதர் களையும் கூட துரத்தியும், கடித்தும், விளையாடியும் தன் வேகம் அல்லது வெறியை குறைக்கும்.அதுபோல ஆடு, மாடு, கோழிகளை கடித்து தின்கின்றன. இவற்றை கட்டுப்படுத்த, குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை மட்டுமே வழி. ஆனால், நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்வது, இனப்பெருக்கத்தை சீராக்கும் அமைப்புகள் தமிழகத்தில் மிகக்குறைவாகவே உள்ளன.கடந்த இரு மாதங்களில் ஈரோடு மாவட்டத்தில், 298 செம்மறி ஆடுகள், 221 வெள்ளாடுகள், 12 மாடுகள்; திருப்பூர் மாவட்டத்தில், 364 செம்மறி ஆடுகள், 35 வெள்ளாடுகள், 286 கோழிகள், 1 கன்று என, இரு மாவட்டங்களிலும், 1,217 கால்நடைகள் பலியானதை உறுதி செய்துள்ளோம். அரசிடம் இழப்பீடு கோரி விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினர்.இதுபற்றி கால்நடை வளர்ப்போர் கூறியதாவது: நகரம், கிராமம் என்றில்லாமல், நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவற்றை கட்டுப்படுத்த, அரசு சட்ட திருத்தங்கள் கொண்டு வர வேண்டும். கள்ளச்சாராய இறப்புக்குக்கூட, ஓரிரு நாளில் இழப்பீடு வழங்குகின்றனர். நாய்கள் கடித்து கால்நடை இறந்து, இரு மாதங்களாகும் நிலையிலும், ஆரம்ப கட்ட பணிகள் கூட நடக்கவில்லை. இதற்காக தனி குழு அமைத்து, நாய் கடித்து கால்நடை, மனிதர்கள் இறந்தார்கள் என உறுதியானால், அடுத்தடுத்த நாட்களில் இழப்பீடு கிடைக்க வழி செய்ய வேண்டும். இவ்வாறு கூறினர்.