ஆக்கிரமிப்பு வீட்டுக்கு சீல் அறநிலையத்துறை அதிரடி
காங்கேயம், காங்கேயம் அருகே நத்தக்காடையூர், வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமாக, முள்ளிபுரம் கிராமத்தில், 4.86 ஏக்கர் பரப்பிலான நிலம் உள்ளது. பல ஆண்டுகளாக ஆறு பேர் ஆக்கிரமித்துள்ளனர். இதன் தற்போதைய மதிப்பு, 1.94 கோடி ரூபாய். நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த ஏப்., 15ல் நிலத்தை அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர். இந்த நிலங்களில் செய்யப்பட்ட ஆக்கிரமிப்புகளை அகற்ற விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கவே அதிகாரிகள் திரும்பி சென்றனர். இந்நிலையில் திருப்பூர் மாவட்ட நீதிமன்ற உத்தரவுப்படி, போலீஸ் பாதுகாப்புடன் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நேற்று வந்தனர். ஆக்கிமிரப்பு வீட்டில் இருந்த பொருட்களை எடுத்து விட்டு, சீல் வைத்தனர். திருப்பூர் இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் ஹர்ஷினி, சிவன்மலை உதவி ஆணையர் ரத்தினாம்பாள் மற்றும் கோவில் பணியாளர்கள், ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை மேற்கொண்டனர்.