முருகனை வைத்து மதுரையில் அரசியல் மாநாடு பா.ஜ., மீது காங்., தலைவர் சாடல்
அந்தியூர், ஈரோடு வடக்கு மாவட்ட காங்., சார்பில், அரசியலமைப்பை காப்போம் சிறப்பு பொதுக்கூட்டம், அந்தியூரில் நேற்றிரவு நடந்தது. வடக்கு மாவட்ட தலைவர் சரவணன் தலைமை வகித்தார். காங்., சட்டமன்ற தலைவர் ராஜேஸ்குமார், காங்., மறு சீரமைப்புக்குழு தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பேசினர். கூட்டத்தில் கிராம கமிட்டி உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கி, மாநில காங்., தலைவர் செல்வப்பெருந்தகை பேசியாதவது:காஷ்மீர் பகல்ஹாமில் அப்பாவி சுற்றுலா பயணிகள் மீது நடந்த தாக்குதலில், எந்த மதத்தை சார்ந்தவர்கள்? என்று தீவிரவாதிகள் கேட்டு சுட்டுக் கொன்றதாக மத்திய அரசு கூறுகிறது. தீவிரவாதிக்கு ஏது மதம்? தீவிரவாதி தீவிரவாதிதான். எல்லையில் மூன்று லட்சம் ராணுவ வீரர்களின் பாதுகாப்பையும் கடந்து, 200 கிலோமீட்டர் உள்ளே நுழைந்து, தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். சிந்துார் ஆப்பரேஷனில், அரசின் விமானங்கள் எத்தனை சுட்டு வீழ்த்தப்பட்டன? என்ற தலைவர் ராகுலின் கேள்விக்கு பதிலில்லை. மதுரையில் முருகர் பக்தர்கள் மாநாட்டை பா.ஜ., நடத்துகிறது. தமிழ் கடவுள் முருகனுக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்? உணவு, உடை, மொழி ஆகியவற்றில் பிரிவினை ஏற்படுத்தி, மக்களிடையே பிரிவினைவாதத்தை ஏற்படுத்துகிறது. முருகனை வைத்து அரசியல் செய்யும் மாநாடு மதுரையில் நடக்கிறது. இதையும் முருகன் பார்த்துக் கொண்டிருக்கிறார். 2026 தேர்தலில் உங்களை சூரசம்ஹாரம் செய்து தோற்கடிப்பார். இவ்வாறு அவர் பேசினார்.கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர் உதயகுமரன், முன்னாள் அந்தியூர் வட்டார தலைவர் நாகராஜா, வட்டார தலைவர்கள் பழனிமுத்து, நச்சேஸ்வரன், நகர தலைவர் ஜலாலுதீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.