ஈரோட்டில் தீபாவளி சீட்டு நடத்தி மோசடி தி.மு.க., கவுன்சிலர் மகன்களுடன் ஓட்டம்
ஈரோடு: ஈரோட்டில் தீபாவளி சீட்டு நடத்தி மோசடி செய்த மாநகராட்சி தி.மு.க., பெண் கவுன்சிலர், மகன்களுடன் மாயமானார். ஈரோடு, வளையக்கார வீதியை சேர்ந்த விஜயசந்திரன் தலைமையிலான பெண்கள், ஈரோடு எஸ்.பி., சுஜாதாவிடம் மனு அளிக்க வந்தனர். டவுன் போலீஸ் ஸ்டேஷனில் அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டதால், அங்கு சென்று அளித்தனர். மனுவில், ஈரோடு மாநகராட்சி, 42வது வார்டு தி.மு.க., பெண் கவுன்சிலர் மேனகா - நடராஜன் தம்பதி மகன்கள் கதிரேசன், பாபு. இருவரும் சேர்ந்து ஆதவன் தீபாவளி வாரச்சீட்டை, 2024 அக்.,ல் துவங்கினர். 52 வாரங்கள் சீட்டு பணம் கட்ட வேண்டும். கவுன்சிலர் மகன் என்பதால் பலரும் சேர்ந்து, 100 முதல், 1,000 ரூபாய் வரை தொகை செலுத்தினோம். செப்., 28ல் சீட்டு நிறைவு பெற்றதால், பணம் கேட்க தினமும் செல்கிறோம். ஆனால், வீடு பூட்டி கிடக்கிறது. அவர்கள் கொடுத்த மொபைல் போன் எண்ணும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு உள்ளது. பணத்தை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இருவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர். விசாரணையில், மகன்கள் மற்றும் கணவருடன், கவுன்சிலர் மாயமானது தெரிந்தது. இதேபோல், மேலும் பலர், சீட்டுத்தொகை பெற முடியாமல் ஏமாற்றுத்துக்கு ஆளாகி இருப்பதாக தெரிகிறது.
ரூ.73 லட்சம் மோசடி
திருச்சி மாவட்டம், துறையூரில் வசித்த ஆனந்தன், 47, என்பவர், தீபாவளி பலகார சீட்டு நடத்துவதாக கூறி, 500க்கும் மேற்பட்டோரிடம், 73 லட்சம் ரூபாய் வரை, வசூல் செய்து, திடீரென தலைமறைவாகி உள்ளார். அவரது, மொபைல் போன், 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டு உள்ளதால், ஏமாற்றமடைந்த பொதுமக்கள் போலீசில் புகார் அளித்தனர். துறையூர் போலீசார், ஆனந்தனை தேடுகின்றனர்.