கலெக்டர் அலுவலகத்தில் முதியவர் தீக்குளிக்க முயற்சி
ஈரோடு: ஈரோட்டை அடுத்த லக்காபுரம் முத்துகவுண்டன் பாளையத்தை சேர்ந்தவர் அய்யாவு, 69; இவர் மனைவி மாராயி. தம்பதியருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று மாலை வந்த அய்யாவு, தான் கொண்டு வந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அங்கிருந்த போலீசார் தடுத்து, சூரம்பட்டி ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்தனர். 'வெள்ளோடு, சிறுவங்காட்டு வலசு பகுதியில், இரண்டு சென்ட் நிலம் உள்ளது. அதை அண்ணன் மகன் விற்று விட்டார்.இதுபற்றி பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் தீக்குளிக்க முயன்றேன்' என்று அய்யாவு தெரிவித்தார். அவருக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்ததாக போலீசார் தெரிவித்தனர்.