ஈரோடு:கொடுமுடி, ஊஞ்சலூர் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிடும் பெண்
வேட்பாளர், மக்களிடம் பணம் வசூலித்து, 'டெபாஸிட்' கட்டியுள்ளார்.கொடுமுடி, ஊஞ்சலூர் டவுன் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு அ.தி.மு.க. சார்பில்
செல்வராணி, தி.மு.க., சார்பில் ராஜலட்சுமி, தே.மு.தி.க., சார்பில் கவிதா,
காங்கிரஸ் சார்பில் பூமதி, சுயேட்சை வேட்பாளராக ஐந்து பேர்
போட்டியிடுகின்றனர்.சுயேட்சை வேட்பாளராக களமிறங்கி உள்ள பாலாமணி, தேர்தல்
செலவை குறைக்கும் வகையில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். ஊஞ்சலூர்
மக்கள் ஒவ்வொருவரிடமும், தலா ஒரு ரூபாய் வீதம், 1,013 ரூபாய்
வசூலித்துள்ளார். டவுன் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட ஆயிரம்
ரூபாய் டெபாஸிட் செலுத்தியது போக, மீதம் 13 ரூபாயை கோவில் உண்டியலில்
போட்டுள்ளார்.பிரச்சாரத்துக்கு தங்கள் குடும்ப உறுப்பினர்களை மட்டும்
பயன்படுத்துவதால், தேர்தல் செலவே இல்லாமல், தேர்தலை சந்திக்கும் வேட்பாளர்
என்ற பெயரை சுயேட்சை வேட்பாளர் பாலாமணி பெற்றுள்ளார்.இதுகுறித்து வேட்பாளர் பாலாமணியின் கணவர் நல்லசிவம் கூறியதாவது:செலவே
இல்லாமல் தேர்தலை சந்திக்க வேண்டும் என்பது தான் எங்களது குறிக்கோள்.
எங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து பாலாமணிக்காக, 'வளையல்'
சின்னத்துக்கு ஓட்டு சேகரித்து வருகிறோம். அதிகாலை 6 மணி முதலே, குடும்ப
சகிதமாக, பிரச்சாரத்துக்கு சென்று விட்டு, இரவு வரை பிரச்சாரம்
மேற்கொள்வோம். ஊழலற்ற, வெளிப்படையான நிர்வாகம் அமைப்போம். திருப்பணி காணாத
ஊஞ்சலூர் கோவில்களுக்கு, குடமுழுக்க நடத்த நடவடிக்கை எடுப்போம் என்பது
உள்ளிட்ட 20 வாக்குறுதிகளை கொடுத்து, ஓட்டு சேகரித்து வருகிறோம்.இவ்வாறு
அவர் தெரிவித்தார்.