உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / இறந்த மயில் சடலத்தை மீட்க முயலாமல் அலட்சியம் தீயணைப்பு-வனம்-காவல்துறை அலைக்கழிப்பு

இறந்த மயில் சடலத்தை மீட்க முயலாமல் அலட்சியம் தீயணைப்பு-வனம்-காவல்துறை அலைக்கழிப்பு

ஈரோடு: ஈரோடு, கொல்லம்பாளையம், ஜீவானந்தம் வீதியில் நேற்றிரவு, 7:30 மணியளவில் ஒரு மயில் இறந்து கிடந்தது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். நீண்ட நேரமாகியும் வராத நிலையில், மீண்டும் தொடர்பு கொண்டபோது, போலீசாருக்கு தகவல் தெரிவிக்க சொல்லியுள்ளனர். இதனால் போலீசை தொடர்பு கொண்டபோது, வனத்துறையை தொடர்பு கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளனர். இப்படி மாறி மாறி தகவல் பரிமாற சொல்லியும், 9:30 மணி வரை யாரும் வரவில்லை. இதனால் மீண்டும் தீயணைப்பு துறையிடம் கேட்டபோது, நேரமாகி விட்டது காலையில் வருகிறோம் எனக்கூறி இணைப்பை துண்டித்துள்ளனர்.ஈரோடு மாநகரில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க சமீபத்தில் 'டெடிகேடட் பீட்' என்ற திட்டத்தை எஸ்.பி., தொடங்கி வைத்தார். இதற்காக அந்தந்த பகுதி போலீசாரை தொடர்பு கொள்ள தொலைபேசி எண்களும் அறிவிக்கப்பட்டது. அப்படி தொடர்பு கொண்ட நிலையில்தான், இறந்த தேசிய பறவையை மீட்கவே வராதது, போலீஸ் மீதான நம்பிக்கை கேள்விக்குள்ளாக்கி உள்ளது. பொதுமக்களே மயிலுக்கு இறுதிச்சடங்கு செய்ய நினைத்தாலும், அதன்பின் வரும் வழக்கு, விசாரணையை சமாளிக்க முடியாது என்பதும் நிதர்சனம். மயில் இறந்து கிடக்கும் பகுதியில், நாய் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் மயில் சடலத்துக்கு சிலர் காவல் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி