கோபி:கோபி அருகே ஓடக்காட்டூரில் இயங்கும், பஞ்., யூனியன் துவக்கப்பள்ளியில், கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர்.கோபி
அருகே ஓடக்காட்டூரில் முன்பு துவங்கிய பஞ்சாயத்து யூனியன்
துவக்கப்பள்ளி, பல ஆண்டுகளுக்கு முன் நடுநிலைப்பள்ளியாகவும்,
அதையடுத்து உயர்நிலைப்பள்ளியாகவும் தரம் உயர்ந்தது.
இந்நிலையில், உயர்நிலைப்பள்ளி மட்டும் வேறு இடத்துக்கு
மாற்றமானது. ஒன்று முதல் ஐந்தாம் வரையான துவக்கப்பள்ளி மட்டும்,
இரு ஆசிரியைகளை கொண்டு, 30க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியருடன் அதே
இடத்தில் இயங்குகிறது. உயர்நிலைப்பள்ளி இடமாறினாலும், பழைய
இடத்தில் இயங்கும் துவக்கப்பள்ளியின் சுற்றுச்சுவரில்,
துவக்கப்பள்ளி எனவும், அதன் மேல் பகுதியில், உயர்நிலைப்பள்ளி என
பெயர்பலகை உள்ளது. ஒரே அரசு பள்ளிக்கு இரு பெயர் பலகையால், ஓடக்காட்டூரில் இயங்குவது துவக்கப்பள்ளியா அல்லது அரசு உயர்நிலைப்பள்ளியாக
என்ற குழப்பம் உள்ளது. தவிர, பள்ளி வளாகத்துக்குள், பல ஆண்டுகளுக்கு
முன், பல லட்சம் ரூபாயில் கட்டிய மூன்று வகுப்பறைகளில், இரண்டு
பூட்டியும், மற்றொன்று பயன்பாடின்றி உள்ளதாக நமது நாளிதழில் செய்தி
வெளியானது. இதையடுத்து, கல்வித்துறை அதிகாரிகள் பள்ளியை ஆய்வு
செய்தனர். * இது குறித்து கோபி டி.இ.ஓ., (தொடக்கக்கல்வி) செல்வம்
கூறுகையில், ''பள்ளியை ஆய்வு செய்துள்ளோம். பெயர் பலகை மாற்றம்
செய்யப்படும். அதுகுறித்து அறிக்கை சி.இ.ஓ.,வுக்கு அனுப்பப்படும்,''
என்றார்.